டெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் பந்துவீச்சில் கருண் நாயர் அதிரடியாக ரன் குவித்தார். இதை அடுத்து பும்ரா கோபம் அடைந்து அவரை நோக்கி ஓடிச் சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். இதனால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓடி வந்து கருண் நாயரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தபோது முதல் பந்திலேயே ஜேக் பிரேசர் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மூன்றாம் வரிசையில் கருண் நாயர் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும். அவர் அதிரடியாக பேட்டிங் செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் வரிசையாக பவுண்டரிகளை அடித்தும் சிக்ஸர்களை அடித்தும் மிரட்டினார்.
பும்ரா வீசிய நான்காவது ஓவரில் 11 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. ஆனால், ஆறாவது ஓவரில் கருண் நாயர் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார்.
தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர். நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர். ரோஹித் சர்மா இதையெல்லாம் ஓரமாக நின்று ரசித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த போட்டியில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்ததை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.