மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விஸ்வாசமாக இருந்த போதும், அந்த அணி நிர்வாகம் தன்னை மதிக்கவில்லை என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்கு டிரான்ஸ்ஃபெர் செய்யப்பட்ட போதும் கூட தனது மனம் மும்பை அணியுடன் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ராபின் உத்தப்பா, 320 ரன்களை விளாசி இருந்தார். அப்போது சனத் ஜெயசூர்யாவுக்கு பின் அதிக ரன்கள் குவித்த மும்பை வீரராக ராபின் உத்தப்பா இருந்தார்.

இருப்பினும் திடீரென 2009ஆம் ஆண்டு அவர் மும்பை அணியில் இருந்து ஆர்சிபி அணி ட்ரேட் செய்யப்பட்டார். இதனால் 2 சீசன்கள் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ராபின் உத்தப்பா தள்ளப்பட்டார். ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே மும்பை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது.
அண்மையில் கூட ஐபிஎல் மெகா ஏலத்தில் வில் ஜாக்ஸை விட்டுக் கொடுத்திருந்தனர். அதேபோல் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக கேமரூன் க்ரீனை ரூ.17.50 கோடிக்கு ட்ரேடில் வாங்கி கொண்டனர். இதன் தொடக்க புள்ளியாக ராபின் உத்தப்பா இருந்துள்ளார். இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், அப்போது நான் ஆர்சிபி வீரர் என்று எந்த சூழலிலும் உணரவில்லை.
ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விஸ்வாசமாக இருந்தேன். மனம் அங்கிருந்து வேறு எங்கும் பயணிக்க விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் இங்கிலீஸ் பிரீமியர் லீக்கை போல் கிரிக்கெட்டில் நாம் முதல்முறையாக லீக் தொடரில் விளையாடினோம். அதனால் ஒரு கிளப்பில் இருந்து மற்றொரு கிளப்பிற்கு செல்வது என்றால் என்னவென்றே புரியவில்லை.
டிரான்ஸ்ஃபெர் என்றால் என்னவென்று புரிவதற்கு சில நேரம் பிடித்தது என்று சொல்ல முடியும். அதுநாள் வரை டிரான்ஸ்ஃபெர் மூலமாக ஒரு வீரரின் மனம் எவ்வளவு பாதிப்படையும் என்பதை சிந்தித்ததே கிடையாது. மும்பை அணியுடன் தொடர்ந்து பயணிக்க விரும்பியதால், என்னை மன்னித்துவிடுங்கள்.. இந்த அணியில் இருந்து வெளியேற விரும்பவில்லை என்று அந்த அணியின் மேனேஜரிடம் கூறினேன்.
அதற்கு மும்பை அணியின் மேனேஜர், நீங்கள் வெளியேறவில்லை என்றால் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து அனைத்து போட்டிகளிலும் விளையாடுவீர்கள் என்று எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று தெரிவித்தார். அப்போது, மும்பை அணி நிர்வாகம் என்னை விரும்பவில்லை என்று தெரிய வந்ததாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக அணிகளுக்கான விளையாடிய வீரர்களில் ராபின் உத்தப்பாவும் ஒருவர். மும்பை, ஆர்சிபி, புனே, கேகேஆர், ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருப்பினும், சிஎஸ்கே அணியில் தான் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.