மும்பை: இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மிகப்பெரிய கேப்டனாகவும், வீரராகவும் வளர்ந்ததற்கு மும்பை அணியும் முக்கியக் காரணம் என்று முன்னாள் வீரர் பிரக்யன் ஓஜா தெரிவித்துள்ளார். இதனால் மும்பை அணியை விட்டு ரோஹித் சர்மா விலக முடிவெடுப்பதற்கு முன் நன்றாக சிந்திக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ரோஹித் சர்மா மும்பை அணியை விட்டு விலகவுள்ளதாகவும் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட அவமானம், கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது, இம்பேக்ட் பிளேயராக விளையாட வைத்தது என்று ஏராளமான விஷயங்கள் அரங்கேறின.

அதிலும் ஜூனியரான ஹர்திக் பாண்டியா சீனியரான ரோஹித் சர்மாவுக்கு அளித்த மரியாதை அந்த அணி ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரோஹித் சர்மா அடுத்த சீசனில் மும்பை அணியை விட்டு விலக வேண்டும் என்று அவரின் ரசிகர்களே பேச தொடங்கினர். இருந்தாலும் ரோஹித் சர்மா விலகுவாரா, தொடர்வாரா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே ஆகாஷ் சோப்ரா தரப்பில், ரோஹித் சர்மா மும்பையுடன் தொடர மாட்டார். அதேபோல் மும்பை அணியும் ரோஹித் சர்மா உடனான பயணத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறியுள்ளார். தற்போது மும்பை முன்னாள் வீரரான பிரக்யன் ஓஜா பேசுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலகி வருவது எளிதான விஷயமல்ல.
எனது கருத்தை கேட்டால், ரோஹித் சர்மா மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே சொல்வேன். ஏனென்றால் மும்பை அணிக்காக ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிகவும் அதிகம். அதேபோல் ஒரு கேப்டனாக, ஒரு வீரராக முன்னேற்றம் அடைந்ததற்கும், இன்று இந்த நிலையில் ரோஹித் சர்மா இருப்பதற்கும் மும்பை அணியும் ஒரு காரணம்.
அதனால் மும்பை அணியில் ரோஹித் சர்மா தொடர்ந்தால் நிச்சயம் வரவேற்பேன். ஆனால் மும்பை அணியில் இருந்து விலகினால், வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் இது பிரான்சைஸ் தொடர் என்பதால், சில நேரம் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக முன்னாள் வீரர்கள் ரோஹித் சர்மா விலக உள்ளதாக கருத்துகள் கூறி வருவது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதாகும் ரோஹித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும், பேட்டிங்கில் எந்தவித பின்னடைவும் அவருக்கு இல்லை. அதேபோல் ஒரு கேப்டனாக ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருப்பதால், அவரை மும்பை அணி விடுவித்தால் ஏலத்தில் அவரை வாங்க பலரும் போட்டிபோடுவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே லக்னோ, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் ரோஹித் சர்மா மீது ஆர்வம் இருப்பதை வெளிப்படையாக காட்டியுள்ளனர். அதேபோல் ரீடென்ஷன் பாலிசியில் பிசிசிஐ ஏதாவது ட்விஸ்ட் வைக்கும் பட்சத்தில் ரோஹித் சர்மாவை தான் மும்பை அணி ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் பலரும் ரீடென்ஷன் விதிமுறைகள் வெளியாவதற்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.