மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் துலீப் டிராபி தொடருக்கான தீவிரமாக தயாராகி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட முடியவில்லை என்றாலும், துலீப் டிராபியில் ஃபார்மை மீட்டெடுக்க முயற்சியில் கேஎல் ராகுல் தீவிரமாக இருக்கிறார்.
அதேபோல் ஹோம் சீசன் தொடங்கவுள்ளதால், கேஎல் ராகுல் ஃபார்முக்கு வருவது இந்திய அணிக்கும் முக்கியமான தேவையாக உள்ளது. ஏனென்றால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேக் அப் தொடக்க வீரர், பேக் அப் விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று எந்த ரோல் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர் கேஎல் ராகுல் தான்.

சில நாட்களுக்கு முன் இந்திய அணி வீரர்கள் உபகரணங்களை ஏலத்தில் விட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக ரூ.1.98 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு அளித்திருந்தார். தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சோசியல் மீடியால் ரசிகர்களின் தாக்குதல் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், சோசியல் மீடியாவில் இருந்து வரும் ட்ரால்களை எளிதாக சமாளித்து வந்தேன். அதற்கு எப்போதும் கவனம் கொடுத்ததே கிடையாது. இளம் வீரராக இருந்த போது கண்டுகொண்டதில்லை. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன் என் மீது அதிகளவிலான ட்ரால் தாக்குதல் நடத்தப்பட்டன. நின்றால் ட்ரால், உட்கார்ந்தால் கூட ட்ரால் என்று நிலையை சந்தித்தேன்.
அதேபோல் இந்திய அணியில் 3 - 4 ஆண்டுகள் கடந்த பின் யாருடனும் எளிதாக உரையாடக் கூடிய குணம் எனக்கு வந்தது. ஒரு அறையில் 100 பேர் இருந்தால் கூட நான் மிகவும் சகஜமாக பேச முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் காஃபி வித் கரண் நிகழ்ச்சி என்னை மொத்தமாக பயமுறுத்திவிட்டது. அது மொத்தமாக வேறு மாதிரியான உலகமாக தெரிகிறது. பள்ளிக் காலத்திலேயே நான் எப்போதும் தன்மையான பையனாகவே இருந்திருக்கிறேன்.
பள்ளியில் படிக்கும் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இவ்வளவு ஏன் யாரிடமும் எந்த தண்டனையும் பெற்றதில்லை. ஆனால் திடீரென இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். அதுபோன்ற ஒரு சூழலை என் வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை. அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கூட எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.