மும்பை: துலீப் டிராபி தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகின்றனர். 4 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு 15 வீரர்கள் என்று மொத்தமாக 60 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா ஆகியோரை தவிர்த்து அனைவரும் விளையாடவுள்ளனர்.
ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் துலீப் டிராபி அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கு முன் முதல்தர கிரிக்கெட்டில் ரிங்கு சிங்கின் பேட்டிங் சராசரி 57.57ஆக உள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் 44 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங், 7 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் உட்பட 3,109 ரன்களை விளாசி இருக்கிறார்.

அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ரிங்கு சிங் மன உறுதி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங்கால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பவுலிங்கில் அசத்தலாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இருந்தாலும் துலீப் டிராபியில் அவர் சேர்க்கப்படாத்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் துலீப் டிராபி தேர்வு செய்யப்படாதது குறித்து ரிங்கு சிங் பேசுகையில், கடந்த முறை நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் நான் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் ரஞ்சி டிராபி போட்டிகளிலும் அதிகளவிலான போட்டிகளில் விளையாட முடியவில்லை.
நான் மோசமாக விளையாடியதன் காரணமாகவே தேர்வு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல் துலீப் டிராபி 2வது சுற்றுக்கான அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். ரிங்கு சிங் தனது ஆட்டத்தை மோசம் என்று விமர்சித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் கடந்த ரஞ்சி சீசனில் உத்தரப் பிரதேச அணிக்காக தனியாளாக ஏராளமான இன்னிங்ஸ்களில் ரிங்கு சிங் போராடினார். இதன் காரணமாகவே ரிங்கு சிங்கை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பேக் அப் வீரராக இந்திய அணி பயன்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஃபீல்டிங்கிலும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்களித்தது குறிப்பிடத்தக்கது.