மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா அணியில் இருந்த வீரர்கள் இன்றும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. அதிலும் கிளென் மெக்ராத், பிரெட் லீ, கில்லஸ்பி போன்ற துல்லியமான வேகப்பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலியா அணி கொண்டிருந்தது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்று 2 வடிவங்களிலும் மெக்ராத் தனியாளாக ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவருக்கு பின் அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் பவுலரை சர்வதேச கிரிக்கெட் காணவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசுகையில், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 3 வடிவங்களிலும் மிகச்சிறந்த பவுலராக விளங்கி வருபவர் பும்ரா மட்டும் தான்.

2 ஆண்டுகளுக்கு முன் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட போது, பலரும் அவரால் கம்பேக் கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் முன்பை விடவும் இன்னும் சிறப்பாக பும்ரா வந்துள்ளார். எந்தவொரு பவுலரையும் அறிய வேண்டுமென்றால், எதிரணி பேட்ஸ்மேன்களிடம் தான் அவரை பற்றி விசாரிக்க வேண்டும். நான் எப்போது பேசினாலும், பும்ராவை அவர்கள் ஒரு கொடுங்கனவாகவே சொல்கிறார்கள்.
அவர் கைகளில் பந்து இருக்கும் போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. ஸ்விங், வேகம், இன்-ஸ்விங்கர், அவுட்-ஸ்விங்கர் என்று அத்தனை செய்ய முடியும். டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவின் பவுலிங்கை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். அவரின் வேகத்தில் எந்த குறைபாடும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவரின் பவுலிங்கில் துல்லியம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது பவுலிங்கில் முன்னேற்றம் அடைந்து கொண்டே செல்கிறார். திறமையும், கன்சிஸ்டன்சியும் இருக்கும் போது நிச்சயம் மிகச்சிறந்த வீரராக வர முடியும். கிளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் கன்சிஸ்டன்சி காரணமாக தான் நீண்ட காலம் விளையாட முடிந்தது. அதுதான் மற்றவர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின், நேதன் லயன், கம்மின்ஸ் உள்ளிட்டோராலும் துல்லியமாக வீச முடிந்தாலும், பும்ராவிடம் உள்ள வெரைட்டி மற்றவர்களிடம் குறைவு என்பது தான் அவரை இன்னும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. ரிக்கி பாண்டிங்கின் பாராட்டு காரணமாக அவர் மும்பை அணியின் பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.