மும்பை: குஜராத் அணியின் கேப்டனாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியாவை ரூ.115 கோடி கொடுத்து அம்பானி குடும்பத்தினர் மும்பை அணிக்கு கொண்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனாக ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவித்தனர்.
இதன் காரணமாக மும்பை அணி வீரர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக நிற்க, மறுபக்கம் இஷான் கிஷன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியா ஆதரவில் இருந்தனர். இதில் பும்ரா யாருக்கும் ஆதரவு அளிக்காமல் தனது பணியை சிறப்பாக செய்தார்.

ஆனால் மும்பை அணியின் ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மா ஆதரவாக ஹர்திக் பாண்டியாவை ட்ரால் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் மும்பை மைதானத்திலேயே ரசிகர்கள் எல்லை மீற, ஹர்திக் பாண்டியா எதனை பற்றியும் கவலைப்படாமல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மனதளவில் ஹர்திக் பாண்டியா பல்வேறு சிக்கலை எதிர்கொண்டார்.
ஆனால் டி20 உலகக்கோப்பை இறுதியில் இந்திய அணி வென்ற போது, எதிர்த்த மும்பை ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவை கொண்டாடினர். இந்த விவகாரம் குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பும்ரா பேசுகையில், இந்தியாவை பொறுத்தவரை எமோஷன் எப்போதும் விவாத பொருளாக இருக்கும். ரசிகர்களும், வீரர்கள் கூட சில நேரங்களில் எமோஷனலாக இருப்பார்கள். ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் போது எங்களை எந்த எமோஷனும் பாதிக்காது.
ஆனால் சொந்த அணியின் ரசிகர்களே நம்மை திட்டினால் என்ன செய்வது? மக்களையும் ரசிகர்களையும் யாராலும் தடுக்க முடியாது. சாதாரணமாக அந்த வீரரை கவனம் செலுத்தாமல் கதவுகளை அடைத்து கொண்டு விளையாடு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நிச்சயம் ரசிகர்களின் எமோஷன் வீரர்களை பாதிப்படைய செய்யும். ஒரு அணியாக எப்போதும் நாங்கள் எதிர்ப்பை ஆதரிக்க மாட்டோம். ஹர்திக் பாண்டியாவுடன் அப்போது தொடர்ந்து பேசி வந்தோம்.
சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. ஆனால் அந்த எதிர்ப்புகள் கூட டி20 உலகக்கோப்பையை வென்ற பின் மாறிவிட்டது. அதனால் ரசிகர்களின் எதிர்ப்பை அவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன். கால்பந்து விளையாட்டில் கூட ரசிகர்கள் ஒரு வீரரை கடுமையாக எதிர்ப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு விளையாட்டு வீரர் இவையனைத்தையும் கடந்து வர வேண்டும். விளையாட்டு வீரர்களின் வாழ்வில் இதுவும் ஒரு அங்கம்.
ஐபிஎல் தொடராக இருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடினாலும் எப்போதும் நாங்கள் அனைவரும் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றிருக்கிறோம். ஹர்திக் பாண்டியாவுடன் நான் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வந்திருக்கிறேன். அவருக்கு உதவி தேவையென்றால், அனைவரும் தயாராக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.