மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில், அவருக்கு துணை கேப்டன் பதவி கூட அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 20 முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில், இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்தத் தொடருக்கான கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது.

ரோகித் இன்னும் எத்தனை ஆண்டுகள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார் என்ற சந்தேகம் இருந்தாலும், இப்போதைக்கு வேறு கேப்டனைத் தேர்வு செய்ய முடியாத நிலை இருப்பதால், அதுவரை ரோகித் சர்மாவே இந்திய அணியின் கேப்டனாகத் தொடர்வார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டிய அவசர சூழ்நிலையும் பிசிசிஐ-க்கு உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் தான், துணை கேப்டன் பதவி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் வருங்கால கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இனி அவருக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக அவர் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் அவர் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருந்தார். பின்னர் காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடிய நிலையில், கடைசி போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது முதல் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்கள் வரை ஜஸ்பிரித் பும்ராவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை இருந்தது.
தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் ஜஸ்பிரித் பும்ரா, அதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற இருக்கிறார். அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது காயம் ஏற்பட்டு விட்டால் அது சிக்கலான நிலைமையை உருவாக்கும் என்பதால், அந்தத் தொடரின் இடையே அவருக்கு ஒரு போட்டியில் ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடிய பின்னர், மூன்றாவது போட்டியில் ஓய்வு எடுக்க அதிக வாய்ப்புள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்படும் என்பதாலும், அவரை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், அவருக்கு மேலும் அழுத்தம் அளிக்கும் வகையில் கேப்டன் பதவியை அளிக்க வேண்டாம் என்ற முடிவில் பிசிசிஐ இருக்கிறது. அதனால் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது துணை கேப்டன் பதவி அளிக்கப்படாது எனத் தெரிகிறது.
அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டிய நிலையில், சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை துணை கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவில் தேர்வு குழு உள்ளது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இது குறித்து ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி நிர்வாகத்துடன் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ரோகித் சர்மா, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருடன் விவாதித்து விட்டு இது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.