மும்பை: 2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் துவங்க உள்ளது. மே மாதம் 25ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரைப் பார்ப்பதற்காக ஜியோ மூன்று விதமான ஆஃபர் அறிவிப்பை வாரி அளித்துள்ளது.
இதை அடுத்து ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோவின் மூன்று விதமான ஆபர்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முதலில் ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்களுக்கு இலவச அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தங்கள் ஜியோ எண்ணுக்கு மார்ச் 17க்கு பிறகு 299 ரூபாய் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் ஐபிஎல் தொடர் முழுவதும் ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் மற்றும் இணையதளத்தில் 4K வீடியோ தரத்தில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா செலுத்தாமல் இலவசமாக காணலாம். இதில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. மொத்தம் 90 நாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.
எனவே, ஸ்மார்ட் தொலைக்காட்சி அல்லது ஃபயர்ஸ்டிக், ஆன்ட்ராய்டு தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கும், மொபைல் அல்லது லேப்டாப்பில் பார்க்க விரும்புபவர்களுக்கும் இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அடுத்து ஸ்மார்ட் டிவியில் வைஃபை அல்லது பிராட்பேண்ட் மூலம் இந்தப் போட்டிகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜியோ ஏர் ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்டில் மற்றொரு இலவச அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது தற்போது ஜியோ ஃபைபர் இணைய சேவைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு முதல் 50 நாட்கள் இலவச இணைப்பு அளிக்கப்படும். அதன்படி தற்போது ஜியோ ஃபைபர் இணைப்பை ஒருவர் பெற விண்ணப்பித்தால், ஐபிஎல் தொடரின் முதல் 50 நாட்கள் முழுவதும் இலவச வைஃபை மூலம் அதிவேக டேட்டாவை பெற்று, தொலைக்காட்சியிலோ, லேப்டாப்பிலோ அல்லது மொபைலிலோ ஐபிஎல் போட்டிகளை 4K உள்ளிட்ட அதிக தரத்தில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும்.
மேலும், ஜியோ எண்ணுக்கு 299 ரூபாய் அல்லது அதற்கும் மேற்பட்ட ரீசார்ஜ் செய்தால் அடுத்த 50 நாட்களுக்கு ஃபைபர் இணைய சேவையை இலவசமாக பெறலாம். அடுத்து மொபைல் போனில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பதற்கு டேட்டா தேவை. இதற்கு முந்தைய ஆண்டுகளில் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ஆஃபர்களை மட்டுமே ஜியோ அளித்துள்ளது. ஆனால், இந்த முறை அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் 17 அல்லது அதற்குப் பிறகு, தங்களின் ஜியோ மொபல் எண்ணுக்கு குறைந்தது 299 ரூபாய் அல்லது அதற்கும் மேற்பட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5ஜி டேட்டா அன்லிமிடெட் ஆக வழங்கப்படும். இந்த மூன்று அறிவிப்புகளால் ஐபிஎல் தொடரைப் பார்க்க திட்டமிட்டு வரும் கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது வழக்கமாக அளிக்கப்படும் ஜியோ ஐபிஎல் ஆஃபர்களை போல அல்லாமல் ஜியோ எண்ணுக்கு 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்துடன் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிராட்பேண்ட், மொபைல், ஜியோ ஹாட்ஸ்டார் செயலி என மூன்றையும் இணைத்து இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரும் ஜியோ எண்ணுக்கு வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் மூலமே இந்த ஆஃபரை பெற முடியும்.