கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 175 ரன்களை இலக்காக கேகேஆர் அணி நிர்ணயித்துள்ளது. பவர் பிளே ஓவர்களில் கேகேஆர் அணி 60 ரன்களை விளாசிய நிலையில், கடைசி 5 ஓவர்களில் வெறும் 28 ரன்களை மட்டுமே சேர்த்தது அந்த அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது.
18வது ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டி காக் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை ஹேசல்வுட் வீசினார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் ரஹானே - சுனில் நரைன் கூட்டணி இணைந்தது. 3 ஓவர்கள் வரை இருவரும் நிதானம் காத்தனர். இந்த நிலையில் ரஷீக் தார் வீசிய 4வது ஓவரில் ரஹானே 2 சிக்ஸ், 1 பவுண்டரியை விளாசி தள்ளினார். தொடர்ந்து ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாடும் ரஹானே கைகளுக்கு சென்றது. க்ருணால் பாண்டியா வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரியை விளாச, யாஷ் தயாள் வீசிய 6வது ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட் 20 ரன்களை விளாசினார்.
இதனால் கேகேஆர் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரஹானே 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். கேகேஆர் அணியின் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரஹானே அரைசதம் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். பின்னர் சுனில் நரைனும் அதிரடியில் இறங்க, கேகேஆர் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.
10 ஓவர்களில் 107 ரன்கள் குவித்திருந்த நிலையில் சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹானேவும் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் கண்மூடி திறப்பதற்குள் ஆர்சிபி அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கும் 12 ரன்களில் க்ருணால் பாண்டியா பந்தில் போல்டாகி வெளியேற, ரஸ்ஸல் 4 ரன்களிலும், தனியாக போராடி கொண்டிருந்த ரகுவன்ஷி 30 ரன்களிலும் வெளியேறினார். கடைசி நேரத்தில் வந்த ரமன்தீப் சிங் நிதானமாக விளையாட, கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்துள்ளது. கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி அணி 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது.