மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்த போது, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலை மைதானத்திலேயே வைத்து கடுமையாக பேசி இருந்தார். அந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை விட்டே கே எல் ராகுல் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் லக்னோ அணியில் இடம் பெற உள்ளது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அவர் கேப்டனாக இருக்கப் போவதில்லை. தன் ஒரு வீரராக மட்டும் இடம் பெற விரும்புவதாக ராகுல் தாமாக முன்வந்து கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் கே எல் ராகுல். அப்போது தான் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக அவர் கூறியதாகவும், தான் பேட்ஸ்மேன் ஆக மட்டும் விளையாட விரும்புவதாகவும் கூறி இருக்கிறார். அதை சஞ்சீவ் கோயங்கா ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா லக்னோ அணியில் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் இருவரில் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டனாக இருக்கிறார் நிக்கோலஸ் பூரன். மேலும், உலகின் முன்னணி டி20 வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அதனால், அவரையே லக்னோ அணியின் கேப்டனாக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இது குறித்து சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்திருக்கும் ரசிகர்கள் சிலர், சஞ்சீவ் கோயங்கா தான் கே எல் ராகுலை கேப்டன்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கூறி இருப்பார் என தங்கள் ஊகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.