மும்பை: இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பின் முக்கியமான வீரர் கேஎல் ராகுல். ஆசியக் கோப்பை தொடங்கி அதன்பின் ஆடிய ஒவ்வொரு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சில விமர்சனங்களை சந்தித்தார்.
இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுலின் ஆட்டம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. விராட் கோலிக்கு பின் டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது கேஎல் ராகுல் தான். இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் கேஎல் ராகுல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேஎல் ராகுல் ஓய்வை அறிவிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு படையெடுத்தனர். இந்த நிலையில் ஓய்வு தொடர்பான தகவல்களை மறுக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கேஎல் ராகுல் தனது பேட்டிங் பயிற்சியை மீண்டும் தொடங்கி இருக்கிறார். துலீப் டிராபி தொடரில் சுப்மன் கில் தலைமையிலான டீம் ஏ -வில் இடம்பெற்றுள்ள கேஎல் ராகுல், பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பாதியில் கேஎல் ராகுல் விலகினார்.
தற்போது இந்திய அணியின் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கான பயிற்சியாக துலீப் டிராபி அமைந்திருக்கிறது. 32 வயதாகும் கேஎல் ராகுல், பயிற்சியை தொடங்கியதன் மூலமாக ஓய்வு பெறும் நோக்கமே கிடையாது என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மேலும், கேஎல் ராகுல் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் துலீப் டிராபி அணியில் கேஎல் ராகுல் உடன் துருவ் ஜுரெல்லும் இடம்பெற்றுள்ளார். இதனால் கேஎல் ராகுல் முழுக்க முழுக்க பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.