மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கே எல் ராகுல் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியலில் கே எல் ராகுல் இடம் பெறவில்லை. எனவே, அவர் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் அது பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே எல் ராகுல், தனக்கு சுதந்திரம் வேண்டும் என்றும், அணியில் நல்ல சூழ்நிலை வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். மேலும், இந்திய டி20 அணியில் தனக்கு வாய்ப்பு பறிபோக லக்னோ அணியில் சரியான சூழலில் தான் விளையாடாதது தான் காரணம் என மறைமுகமாக கூறி உள்ளார்.

இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் அவருக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ராகுலை மைதானத்தில் வைத்தே வார்த்தைகளால் வறுத்து எடுத்து இருந்தார். அந்த சம்பவத்துக்கு பின் கே எல் ராகுல் அந்த அணியை விட்டு விலகுவார் என கூறப்பட்டு வந்தது. தற்போது அது நடந்தும் இருக்கிறது.
அந்த வீடியோவில் கே எல் ராகுல் பேசியது இதுதான் - "நான் ஐபிஎல் தொடரில் புதிதாக தொடங்க விரும்புகிறேன். எனக்கான வாய்ப்புகள் என்ன என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். எனக்கு எங்கு சுதந்திரம் மற்றும் எளிமையான அணி சூழ்நிலை இருக்கிறதோ அங்கு சென்று விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். சில சமயம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து விலகிச் சென்று உங்களுக்கு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்."
"நான் இந்திய டி20 அணியில் சில காலமாக இடம் பெறவில்லை. நான் ஒரு வீரராக எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். நான் இந்த ஐபிஎல் சீசனை எதிர் நோக்கி கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற, அதற்கான நடைமேடை எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய நோக்கம் இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவது தான்." எனக் கூறி இருக்கிறார்.
இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நல்ல சூழ்நிலை நிலவாததால் தான் தன்னால் சரியாக விளையாட முடியவில்லை. அதனால் தான் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை என ராகுல் சூசகமாக கூறி இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.