மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனை ஒட்டி நடைபெறும் மெகா ஏலம் பல அணிகளுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மெகா ஏலத்தை நடத்தக்கூடாது என்று பல அணிகளும் வலியுறுத்தி வருகின்றன. சில அணிகள் மெகா ஏலத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்றும் சில அணிகள் வீரர்கள் தக்கவைக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் மற்றும் வீரர்கள் தக்க வைக்கும் இந்த நடவடிக்கையில் எந்த அணிக்கு அதிக பின்னடைவு ஏற்படும் என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் மெகா ஏலத்தில் முதலில் பாதிக்கப்பட போவது மும்பை இந்தியன்ஸ் அணிதான். ஏனென்றால் மும்பை அணியில் ஏகப்பட்ட ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள்.

சூரியகுமார் யாதவ், பும்ரா, ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா போன்ற நான்கு வீரர்கள் உள்ள நிலையில் அவர்களை தக்க வைக்கும் போது இதில் இரண்டு வீரர்களின் ஊதியம் 10 கோடிக்கு கீழ் செல்லும். இதனால் தங்களுக்கு அதிக ஊதியம் வேண்டும் என்று நான்கு வீரர்களுமே போர் கொடி தூக்கினால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.
இதனால் இரண்டு வீரர்களை அவர்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கும் சூழல் உருவாகலாம். இந்த மெகா ஏலத்தில் பாதிக்கப்படும் போகும் இரண்டாவது அணி சன்ரைசர்ஸ் தான். ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பிசிசிஐ நடத்திய கூட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவியா மாறன் தான் மெகா ஏலத்தை நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு காரணம் சன்ரைசர்ஸ் அணி தற்போது தான் பல இளம் வீரர்களையும் அனுபவ வீரர்களையும் கலந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி பல ஆண்டுகளாக அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களை வளர்த்து அவர் தற்போது தான் வெற்றிகரமான வீரராக திகழ்கிறார். இந்த சூழலில் சன்ரைசர்ஸ் அணி யாரை விடுவது யாரை தக்க வைப்பது என்ற குழப்பம் இருக்கும்.
இதில் சில வீரர்கள் அணியை விட்டு வெளியேறினால் நிச்சயம் ஏலத்தில் மீண்டும் வாங்குவது சிரமமாகிவிடும். இதேபோன்று இந்த பட்டியலில் பாதிக்கப்படப் போகும் மூன்றாவது அணி கொல்கத்தா அணிதான். கொல்கத்தா அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழலில் மெகா ஏலம் மூலம் அந்த அணி மீண்டும் உடைய வாய்ப்பு இருக்கிறது.
இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஆங்கிரிஷ் ரகுவன்சி, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி போன்ற பல வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். இதில் யாரை தக்க வைப்பது? யாரை விடுவிப்பது என்ற குழப்பம் அந்த அணிக்கு நிகழும். இதனால்தான் நடிகர் சாருக் கான் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்ற போது ரைட் டூ மேட்ச் கார்டு என்ற வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.