மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி ஏலத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரை 50 கோடி கொடுத்து வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக 2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டனான அவரை அந்த அணியின் நிர்வாகம் நீக்கியதை அடுத்து அவர் மனம் உடைந்து போனார். அப்போதே அவர் அந்த அணியை விட்டு விலகும் முடிவை எடுத்து விட்டதாகவும், 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா பெயர் சேர்க்கப்பட்டால் அவரை வாங்க பல அணிகளும் முட்டி மோதும். இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணிகள் ஒவ்வொன்றும் அவருக்காக ஏலத்தில் மிகப்பெரிய தொகையை கேட்க வாய்ப்பு உள்ளது. ஐந்து ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் என்பதோடு, இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் அவரை தங்கள் அணியின் கேப்டனாக்க வேண்டும் என பல அணிகளும் திட்டமிட்டு உள்ளன.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் அதற்கான முழு திட்டத்தை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ரோஹித் சர்மாவை ஐபிஎல் ஏலத்தில் வாங்க சுமார் 50 கோடியை அந்த அணிகள் ஒதுக்க உள்ளன. இந்த முறை, ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் 120 முதல் 140 கோடி வரை வீரர்களின் சம்பளத்துக்காக செலவு செய்ய அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே 50 கோடிகளை கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையில் 20க்கும் மேற்பட்ட வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என அந்த அணிகள் திட்டமிட்டுள்ளன. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா பெயர் இடம் பெற்றால் அவருக்கு ஏலத்தில் அவருக்கு கேட்கப்படும் விலையானது ஐபிஎல் வரலாற்றை புரட்டிப்போடும் என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.