லக்னோ: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மூன்று ஆண்டுகளாக தங்கள் அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுலை அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியின் புதிய ஆலோசகராக இணைந்துள்ள முன்னாள் வீரர் ஜாஹிர் கான் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கும், கேப்டன் கே எல் ராகுலுக்கும் இடையே ஆடுகளத்திலேயே வாக்குவாதம் எழுந்தது. பின்னர் அது சாதாரண விஷயம் தான் என இருவரும் அதை சமாளித்தனர். அப்போதே கே எல் ராகுல் 2025 ஐபிஎல் தொடருக்கு முன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது.

தற்போது அதன் உச்சமாக அவரை அணியிலிருந்தே வெளியேற்ற ஜாஹிர் கான் மற்றும் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது. கே எல் ராகுல் இதுவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக நீண்ட நேரம் களத்தில் நின்று, அதிக ரன் சேர்த்து இருக்கும் பெரும்பாலான போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்து இருக்கிறது.
இதில் இருந்து அவர் மிக நிதானமாக ஆடுகிறார் என்பதும், அந்த போட்டியின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆடவில்லை என்பதும் தெரிய வந்து இருப்பதாகக் கூறி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் அவரை நீக்க உள்ளது. இதே காரணத்துக்காக தான் கே எல் ராகுல் இந்திய டி20 அணியில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் டி20 போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் நிதானமாக ஆடுவது கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனத்தை சந்தித்து வந்தது. அதன் முடிவாக தற்போது அவர் ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியை இழந்ததோடு லக்னோ அணியில் இருந்தும் நீக்கப்பட இருக்கிறார். இனி அவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு செல்வார் என கடந்த சில நாட்களாக அந்த சமூக வலைதளங்களில் பேச்சு உள்ளது. அது உண்மைதானோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.