22 வயசு தான் ஆகுது.. உள்ளூர் கிரிக்கெட்டை நன்றாக விளையாடு தம்பி.. மயங்க் யாதவிற்கு வந்த அட்வைஸ்!
மும்பை: ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்காக களமிறங்கிய மயங்க் யாதவ் 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் வீழ்த்திய விக்கெட்டுகளை விடவும் தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்திற்கு மேல் அவரால் பவுலிங் செய்ய முடிந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
மயங்க் யாதவின் பவுலிங்கை பார்த்த ஸ்டீவ் ஸ்மித், அவரின் பவுலிங்கை ஆஸ்திரேலியாவில் விளையாட ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் காயம் காரணமாக மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியுடன் விலகினார். அதுமட்டுமல்லாமல் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் கூட விளையாட மயங்க் யாதவ் தயாராகவில்லை. இதனால் ஃபிட்னஸ் பிரச்சனையில் மயங்க் யாதவ் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

தற்போது என்சிஏவில் இருக்கும் மயங்க் யாதவ், துலீப் டிராபி தொடரில் விளையாட கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் மயங்க் யாதவ் குறித்து இந்திய முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே பேசுகையில், சில விஷயங்களில் என்னால் அனைவருடனும் ஒத்துப் போக முடியாது. மயங்க் யாதவ் தயாராகவில்லை என்றால், அவரை விளையாட வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்க மாட்டேன்.
ஏனென்றால் மயங்க் யாதவ் இந்த வயதில் தான் அதிகளவில் பவுலிங் செய்ய வேண்டும்.அதிகமாக பவுலிங் செய்யும் போது தான் பந்தை கட்டுப்பாட்டுடன் நம்மால் வீச முடியும். எவ்வளவு தூரம் நமது உடல், பவுலிங் செய்வதற்கு ஒத்துழைக்கும் என்று அறிந்து கொள்ள முடியும். அவர் பவுலிங் செய்தால் காயமடைவார் என்று கூறி பொத்தி வைத்திருக்க முடியாது.
உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு சீசன் முழுமையாக விளையாடினாலே நம்மால் நமது பவுலிங்கை புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் வெவ்வேறு பிட்சிகளில் நாம் பவுலிங் செய்வோம், வெவ்வேறு தருணங்களில் சூழல்களில் பந்துவீச அழைக்கப்படுவோம். ரஞ்சி டிராபியில் 6 செஷன்கள் நாம் களத்தில் இருக்க வேண்டிய சூழல் வரும். அப்போதும் கூட நம்மால் அதே உற்சாகத்துடன் வேகத்துடன் பவுலிங் செய்ய முடிகிறதா என்று கற்றுக் கொள்ள முடியும்.
இவை தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது உதவியாக இருக்கும். என்னை பொறுத்தவரை மயங்க் யாதவ் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். 22 வயதாகுவதால், அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அதேபோல் அடிக்கடி காயமடையும் வீரராக இருக்கிறார். அவர் காயமடைவதை கட்டுப்படுத்த முடியும். அதற்கு அவரின் களத்திற்கு வெளியிலும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications