மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இன்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
45 பந்துகளில் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். இதில் ஆறு சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு இன்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மா வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள் எப்போதுமே கொண்டாட வேண்டும் என்று நினைப்பார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து இதுபோன்ற விருதைப் பெறுகிறேன் என நினைக்கின்றேன். சரியாக விளையாடாத நேரத்தில் நம் திறமை மீது நாமே சந்தேகம் கொள்வது சுலபமாக மாறிவிடும். அப்படி ஒரு கட்டத்தில் நாம் வித்தியாசம் வித்தியாசமாக செய்ய முயற்சி செய்வோம். ஆனால் என்னை பொறுத்தவரை நான் பந்தை நன்றாக அடித்து விளையாட பயிற்சி செய்தேன்.
என்னுடைய மனது எப்போதுமே தெளிவாக இருக்கிறது.
இதுபோன்ற பேட்டிங்கில் சரிவு ஏற்படலாம். ஆனால் நம் திறமை மீது எப்போதும் நாம் சந்தேகம் அடையக் கூடாது. அப்படி செய்தால் நம் மீது நாமே தேவையில்லாத அழுத்தத்தை செலுத்துகின்றோம் என அர்த்தம். இன்று நான் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். நான் அடிப்பதற்கு ஏதுவான இடத்தில் பந்து விழுந்தால் அதை அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன்.
என்னால் தொடர்ந்து இப்படி அதிரடியாக ஆட முடியாமல் போனது உண்மைதான். ஆனால் என் திறமை மீது நான் என்றுமே சந்தேகம் பட்டது கிடையாது. நான் களத்தில் இரண்டு ஓவர் அல்லது மூன்று ஓவர்கள் நின்று விளையாடுவது அணிக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பில்டிங் செய்யாமல் திடீரென்று பேட்டிங் செய்ய வர கொஞ்சம் கடினமாக தான் இருந்தது.
அணி என்ன சொல்கிறதோ அதை செய்வதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை. எனது பெயரில் ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருப்பதை நினைத்து பெருமை கொள்கின்றேன். சிறுவனாக இங்கு வந்து நான் விளையாடி இருக்கின்றேன். ஒரு கட்டம் வரை வான்கடே மைதானத்தில் உள்ளே வரக்கூட எங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது இதே மைதானத்தில் என்னுடைய பெயரில் ஒரு ஸ்டாண்ட் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். இது மிகவும் பெருமையான விஷயம். தற்போது நாங்கள் சரியான நேரத்தில் வெற்றிகளை பெற்று வருகிறோம். இந்த வெற்றி என்பது மிகவும் முக்கியமானது. தற்போது புள்ளி பட்டியலில் நாங்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்கின்றோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.