மும்பை: கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ரோஹித் சர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவருக்கு பதிலாக குஜராத் அணியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது.
இருந்தாலும் மும்பை அணி கடைசி இடத்தில் தான் நிறைவு செய்தது. ஆனால் ரோஹித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்களை விளாசி தனது பணியை சரியாக செய்து அசத்தினார். அதேபோல் மும்பை மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியாவிற்கு எதிர்ப்பு எழுந்தது அந்த அணி நிர்வாகத்தை கலங்க செய்தது. இதனால் ரோஹித் சர்மா அடுத்த சீசனில் வேறு அணிக்கு இடம்பெயர்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

அதற்கேற்றபடி ரோஹித் சர்மாவை வாங்குவதற்கு லக்னோ, டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வளவு ஏன், ஆர்சிபி அணியும் ரோஹித் சர்மா ஏலத்திற்கு வந்தால் பெரும் தொகை கொடுத்து வாங்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் என்ற பிராண்ட் ரோஹித் சர்மாவிற்கு பின் இருப்பதால், அவருக்கான மார்க்கெட் குறையாது என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் மும்பை அணியால் ரோஹித் சர்மாவை தக்க வைப்பதும் எளிதாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவை ரூ.16 கோடி கொடுத்து தக்க வைத்தால், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருவருக்கும் அதே அளவிற்கான ஊதியம் கொடுக்க வேண்டும்.
இன்னொரு பக்கம் நட்சத்திர வீரர் பும்ராவுக்கான ஊதியத்தையும் மும்பை அணியால் குறைக்கவே முடியாது. 4 ஜாம்பவான்களில் யாருக்கு குறைந்த ஊதியம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ரோஹித் சர்மா மாற்று அணிக்கு செல்வார் என்று பலரும் கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரோஹித் சர்மா விவகாரம் குறித்து இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ரோஹித் சர்மா அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்துள்ளார். 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார், இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை வென்றுவிட்டார். மும்பை அணியை அதிக முறை வழிநடத்திய கேப்டன் ரோஹித் சர்மா தான்.
ரோஹித் சர்மா இன்னும் 3 ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாடலாம். பல நேரங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் ஒரு விஷயமாகவே இருக்காது. ஏனென்றால் வாழ்வில் போதுமான பெயரும், புகழும், பணமும் கிடைத்த பின் திருப்தியை நோக்கி நகர்வோம். அதனால் ஊதியம், கேப்டன்சி, பொறுப்பு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் மும்பை அணியிலேயே இருக்கலாம் என்று ரோஹித் சர்மா முடிவெடுக்கலாம்.
அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதனை நானும் உணர்ந்திருக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லும் போது அந்த அணியின் சூழல் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ராயல்ஸ் நிர்வாகம் என்னை அவ்வளவு பாதுகாப்பாக உணர வைத்தார்கள். நானும் 3 ஆண்டுகளில் எனது ஆட்டத்தில் மேம்பட்டுள்ளேன். அதுபோல் மும்பை அணியில் ரோஹித் சர்மா தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.