மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்ட நேரத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் திரும்பினர்.
இந்த சூழ்நிலையில் பல வீரர்கள் தங்களது அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள மூன்று ஸ்டார் வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்பவில்லை. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஆர் சி பி அணியில் இருந்து தட்டித் தூக்கப்பட்ட வில் ஜாக்ஸ் மற்றும் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கார்பின் போஸ் ஆகிய மூன்று வீரர்களுமே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நிலையில் அவர்கள் மூன்று பேரும் அணிக்கு திரும்பவில்லை.
இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாற்றுவீரரை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்திருக்கிறது. அதன்படி இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பாரிஸ்டோ, தற்போது வில் ஜாக்ஸ்க்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். 5 கோடியே 25 லட்சம் ரூபாய் பாரிஸ்டோக்கு வழங்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு எடுத்திருக்கிறது.
அனுபவம் நிறைந்த அதிரடி வீரரான பாரிஸ்டோ தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்திருப்பது அவர்களுடைய பேட்டிங் பலத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இதேபோன்று கடந்த சீசன் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரிச்சர்ட் கிலீசன் என்ற வீரரும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். ரியான் ரிக்கல்டன் பதிலாக அவர் மும்பை அணியில் விளையாடுகிறார்.
இவருக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியத்தை வழங்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவெடுத்துள்ளது. இதேபோன்று தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கார்பின் போஸ்க்கு பதிலாக இலங்கை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஷரீத் அசலங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி சேர்த்திருக்கிறது. அவருக்கு 75 லட்சம் ரூபாய் சம்பளத்தை மும்பை அணி கொடுக்கப் போகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது.
12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். எஞ்சிருக்கும் இரண்டு போட்டிகளில் மும்பை அணி கண்டிப்பாக ஒரு போட்டியில் வெல்ல வேண்டும். அதுவும் வரும் புதன்கிழமை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற்று ஆக வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் நிகழ்ந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இக்கட்டான நேரத்தில் தற்போது மூன்று மாற்று வீரர்கள் மும்பை அணிக்கு கிடைத்திருப்பது அந்த அணி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்திருக்கிறது.