மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்பட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 4 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அதில் கடந்த 4 சீசனில் ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் கடந்த சீசனிலேயே திடீரென குஜராத் அணியிடம் இருந்து ட்ரேட் மூலமாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்பட்டு கேப்டனாக்கப்பட்டார்.

இருந்தாலும் அந்த சீசனிலும் கடைசி இடத்தில் தான் மும்பை அணி நிறைவு செய்தது. இதனால் அடுத்த சீசனில் மும்பை அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைக்க வேண்டும் என்பதில் ஆகாஷ் அம்பானி தீவிரமாக இருக்கிறார். அதற்காக தலைமைப் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சரை நீக்கிய மும்பை அணி, மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவை கொண்டு வந்துள்ளது.
இதன்பின் மெகா ஏலத்தில் வில் ஜாக்ஸ், போல்ட், தீபக் சஹர், அல்லா கசன்ஃபர் உள்ளிட்டோரை வாங்கியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பின் மும்பை அணியின் பிளேயிங் லெவன் வீரர்கள் பயங்கரமாக இருந்தாலும், பேக் அப் வீரர்கள் மட்டுமே எதிர்பார்த்த அளவிற்கு வாங்க முடியவில்லை என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மும்பை அணி அடுத்தக் கட்டமாக பயிற்சியாளர்கள் மாற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பவுலிங் பயிற்சியாளராக பராஸ் ஆம்ரே நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவரும் லசித் மலிங்காவும் இணைந்து மும்பை வீரர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளனர். தற்போது 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பம்மெண்ட் நீக்கப்படுவடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக 43 வயதாகும் இங்கிலாந்து முன்னாள் வீரரும், ஃபீல்டிங் பயிற்சியாளருமான கார்ல் ஹாப்கின்சன் ஒப்பந்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியுடன் பணியாற்றியவர் கார்ல் ஹாப்கின்சன். இதனால் அவரின் இணைப்பு மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.