மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்த ஹர்திக் பாண்டியா நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் 2024 ஐபிஎல் தொடருக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே ஆன அந்த ஒப்பந்தத்தில் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் இடம்பெற்று இருந்ததாக பரவலாக பேசப்பட்டது.
அதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியாவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வார் என்று நம்பப்பட்டது. ஆனால் பிசிசிஐ வட்டாரத்தில் அந்த ஒப்பந்தம் குறித்து விசாரித்த போது கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது என்ற தகவல் கிடைத்தது.

ஐபிஎல் தொடரில் ஒரு வீரருக்கும் ஐபிஎல் அணிக்கும் இடையே ஆன ஒப்பந்தம் என்பது பிசிசிஐ முன்னிலையில் தான் கையெழுத்து இடப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களை பிசிசிஐ தான் முடிவு செய்யும். அதில் எந்த ஒரு அணியோ, வீரரோ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதிமுறைகளை சேர்த்துக் கொள்ள முடியாது. அதன்படி பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் நிச்சயமாக கேப்டன்சி அளிக்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் இடம்பெற்று இருக்க வாய்ப்பு இல்லை.
அதனால் எப்போது வேண்டுமானாலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கலாம். அதற்கு எந்த தடையும் இருக்காது. 2024 ஐபிஎல் தொடருக்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமித்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவால் அந்த அணியின் எதிர்காலமே கேள்வி குறியாகலாம் என்ற நிலை தற்போது உள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை அந்த அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் யாரும் விரும்பவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்த அணியை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூர்யகுமார் யாதவை தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டு உள்ளது.
அவருக்கு கேப்டன் பதவியும் அளிக்க அந்த அணி தயாராக உள்ளது. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கலாமா? என ஆலோசித்து வருகிறது. ஐபிஎல் ஏலம் தொடர்பாக பிசிசிஐ விரைவில் அறிவிப்புகளை வெளியிட உள்ளது. அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவு என்ன என்பது வெளிப்படையாக தெரியவரும்.
இதன் இடையே ரோஹித் சர்மா அந்த அணியை விட்டு விலகுவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அவர் நிச்சயம் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெறுவார் என கூறப்படுகிறது. அவரை ஏலத்தில் வாங்க சில அணிகள் பெரிய தொகையை ஒதுக்கி உள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் அதில் முன்னிலையில் உள்ளன.