அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த இரு அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
ஏனெனில், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இடம் படுதோல்வி அடைந்திருந்தது. வெறும் 101 ரன்களில் ஆல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருந்தது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 228 ரன்கள் குவித்து, அதன் பின் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் பல அனுபவ வீரர்களும் இருக்கின்றனர். ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என இந்திய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அழுத்தம் நிறைந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லும் என ரசிகர்கள் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். ஏனெனில், இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள மற்றொரு அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.
இறுதிப் போட்டி போன்ற பரபரப்பான ஒரு போட்டியில் அந்த அணி பதற்றம் அடைந்து சில தவறுகளை செய்தாலும், அது மிகப்பெரிய அழுத்தத்தை அளிக்கும் பின்னடைவாக மாறும். மற்ற போட்டிகளில் இருக்கும் அழுத்தமும் இறுதிப் போட்டியில் இருக்கும் அழுத்தமும் நிச்சயம் வெவ்வேறானது.
அனுபவ வீரர்களால் அந்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியும். இறுதிப் போட்டிகளில் அதிகம் விளையாடாத வீரர்களுக்கு அது நிச்சயம் சவாலானதாக இருக்கும். எனவே, ஐபிஎல் இறுதிப் போட்டி என்பது திறமையை தாண்டி மனதளவில் யார் நிலையாக இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு போட்டியாகவும் இருக்கும்.
அந்த வகையில், ஏற்கனவே ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முன்னிலையில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவும் அதே அணியில் இருக்கிறார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இருக்கிறார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் இருக்கிறார்.
எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டியில் ஒவ்வொரு நட்சத்திர வீரர்களுக்கு எதிராக பந்து வீசும் போதும், பேட்டிங் செய்யும் போதும் அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்த அணியே கோப்பை வெல்லும் என ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.