மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் மூன்று முக்கிய வீரர்கள் விரைவில் அந்த அணியில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஹர்திக் பாண்டியா என்ற ஒரே ஒரு வீரரால் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரிய இழப்பை சந்திக்க உள்ளது. ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய மூவரும் வேறு ஐபிஎல் அணிகளுக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருவேளை அவர்கள் வேறு ஐபிஎல் அணிகளுக்கு மாற மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்றால் அவர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் அவர்கள் மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகும் முடிவில் இருக்கின்றனர்.

இதன் காரணமாக, 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ரசிகர்களை பெருமளவில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பும் பெரிய அளவில் சரியும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில்தான் விளம்பரத்துக்கான தொகை நிர்ணயிக்கப்படும்.
அதேபோல அதிக ரசிகர்களை வைத்திருக்கும் அணிகள் டிக்கெட் விற்பனை மற்றும் ஜெர்சி விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும். இந்தியாவின் மூன்று முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் ஒரே நேரத்தில் மும்பை அணியை விட்டு விலகினால் அந்த அணி பல வகைகளிலும் இழப்பை சந்திக்க நேரிடும்.
இது எல்லாவற்றுக்கும் காரணம் ஹர்திக் பாண்டியா தான். 2024 ஐபிஎல் தொடருக்கு முன் பாத்து ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாக இருந்து, ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தன்னிச்சையான முடிவு ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா அதிருப்தி அடைய வைத்தது. ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு மாற்றம் செய்ய மும்பை இந்தியன்ஸ் 100 கோடி கொடுத்ததாக அப்போது தகவல்கள் வெளியானது. 100 கோடி கொடுத்து கேப்டன் ஆக்கப்பட்ட ஒரு வீரரால் தற்போது மும்பை இந்தியன்ஸ் சரிவை சந்திக்கவுள்ளது.