இஷான் கிஷனுக்கு அடுத்த சிக்கல்.. கழற்றி விட தயாராகும் அம்பானி.. 3 இளம் விக்கெட் கீப்பருக்கு குறி!
மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் ஆனந்த் அம்பானி, ஜெயவர்தனே உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
மும்பை அணி தரப்பில் மெகா ஏலம் இனி தேவையில்லை என்றும், மினி ஏலம் மட்டுமே போதுமானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மும்பை அணி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மும்பை அணியில் தான் அதிகளவிலான இந்திய வீரர்கள் உள்ளனர்.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, பும்ரா, நேஹல் வதேரா என்று 7 தரமான இந்திய வீரர்கள் இருக்கின்றனர். இதில் ஹர்திக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரை தக்க வைத்து கொண்டால் கூட மீதமுள்ள இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரை ஏலத்தில் தான் மீண்டும் வாங்க முடியும்.
மும்பை அணியை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டுக்கு பின் இஷான் கிஷன் பெரியளவில் ரன்கள் சேர்க்கவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் மோசமாக செயல்பட்டு வருவதால், அவரை கழற்றிவிட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு சீசனில் 241 ரன்களை சேர்த்த அவர், 2022ல் 418 ரன்களும், 2023ல் 454 ரன்களும், 2024ல் 320 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
தொடக்க வீரராக இருந்து கொண்டு ஒரு சீசனில் கூட 500 ரன்களை சேர்க்க முடியாதது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இவரை ரூ.15.25 கோடி கொடுத்து மும்பை அணி ஏலத்தில் வாங்கியது. ஆனால் மும்பை அணி வைத்த நம்பிக்கையை இஷான் கிஷன் காப்பாற்றவில்லை. இதனால் மும்பை அணி இஷான் கிஷனை கழற்றிவிடும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ரோஹித் சர்மாவையும் பகைத்து கொண்டுள்ளதால், ஹர்திக் பாண்டியாவின் வார்த்தைகள் மட்டுமே இஷான் கிஷனை காப்பாற்ற முடியும். ஆனால் அபிஷேக் போரெல், துருவ் ஜுரெல், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோரை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்பதால், மும்பை அணி இஷான் கிஷனை கழற்றிவிடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications