மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணியை வீழ்த்தி 11வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குஜராத் , பஞ்சாப் , ஆர்சிபி அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காம் இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி அணிகள் போட்டி போட்டது.இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா வெறும் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து ரியான் ரிக்கல்டன் நிதானமாக விளையாடி 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று வில் ஜாக்ஸ் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஒரு கட்டத்தில் சூரியகுமார் யாதவும் திலக் வர்மாவும் நிதானமாக விளையாடி ரன்கனை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 27 பந்துகளில் வெறும் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் மூன்று ரன்களில் வெளியேற மும்பை அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சூழலில் கடைசி இரண்டு ஓவர்களில் சூரியகுமார் மற்றும் நமன் தீர் ஆகியோர் அபாரமாக விளையாடி மும்பை அணியை சரி விலிருந்து மீட்டனர்.
முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் நமன் தீர், சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினர்.மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரிகளை மும்பை அடிக்க 19வது ஓவரில் 27 ரன்கள் சென்றது. இதை அடுத்து, கடைசி ஓவரை இலங்கை வீரர் சமீரா வீசினார் அதிலும் சூரியகுமார் யாதவ் பட்டையை கிளப்பினார். இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அவர் அடிக்க கடைசி 12 பந்துகளில் மும்பை அணி 49 ரன்களை குவித்தது.
இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சூரியகுமார் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டர்களும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். நமன் தீர் 8 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர் என அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 300 என்ற அளவில் இருந்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த இலக்கு கொஞ்சம் குறைவு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் ஏன் ஒரு சாம்பியன் அணி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து காட்டியது.தங்களுடைய அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
இதனால் எந்த ஒரு வீரர்களும் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினர். குறிப்பாக ஒரு பக்கத்தில் பவுல்ட் இன்னொரு பக்கத்தில் சான்ட்நர், பும்ரா என டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வேட்டையாடினர்.தொடக்க வீரர்களுக்கு ஆட்டம் இழக்க அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ராகுல் 11 ரன்களில் வெளியேறினார். அபிஷேக் போரெல் 6 ரன்களில் மட்டுமே எடுக்க டெல்லி அணி 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழ்நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சமீர் ரிஸ்வி மற்றும் விப்ராஜ் நிகம் அணியை சரி விலிருந்து மீட்க போராடினர். விப்ராஜ் நிகம் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க அந்த அணியின் நட்சத்திர தென்னாப்பிரிக்கா வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இரண்டு ரன்களில் வெளியேறினார்.
தனி ஆளாக போராடிய சமீர் ரிஸ்வி 35 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.அஸ்ட்டோஸ் சர்மா ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 18 ரன்கள் மட்டுமே எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணியின் பந்துவீச்சு தரப்பில் மிட்செல் ஷாட்நர் மூன்று விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 11 வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணி இதுவரை 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பது குறிப்பிட்டத்தக்கது.