சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதிய நாக் அவுட் போட்டி சந்திகாரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த நிலையில் சந்திகாரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
இந்த சீசனில் ரோகித் சர்மா சிஎஸ்கே சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் விளாசிய நிலையில் மற்ற ஆட்டங்களில் எல்லாம் பெரிய அளவு சாதிக்கவில்லை. 14 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 389 ரன்கள் அடித்திருந்தார்.

இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் ரோகித் சர்மா தன்னுடைய அபார அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று ஆட்டத்தில் வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன் போன்ற வீரர்கள் இடம் பெறாத நிலையில் புதிய வீரராக இங்கிலாந்து அணியின் ஜானி பாரிஸ்டோ விளையாடினார்.
ஜானி பாரிஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ஒரு புறம் சூரியகுமார் யாதவ் சிக்ஸர்களை பறக்க விட ரோகித் சர்மா தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சூரியகுமாரி யாதவ் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 33 எடுத்தார். மறுபுறம் ரோகித் சர்மா 28 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்தார். இளம் வீரர் திலக் வர்மா மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அதிரடி காட்டிய ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். சதம் அடிப்பார் என ரோகித் சர்மா எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருடைய பேட்டிங்கில் 9 பவுண்டரி நான்கு சிக்ஸர் அடங்கும்.
இறுதி கட்டத்தில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டி, 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் மூலம் 20வது ஓவரில் மும்பை அணி 22 ரன்களை அடித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 228 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.