சென்னை: ஐபிஎல் 2015 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடும் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
ஆரம்பமே மிகப்பெரிய ஒரு சவால் சிஎஸ்கே அணிக்கு காத்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் இந்த அட்டவணை குறித்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இரண்டு மிகப்பெரிய இடி வந்து இறங்கி இருக்கிறது.

இதில் ஒன்று கடந்த சீசனில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் தற்போது அந்த தடை புதிய சீசனில் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஒரு இடியாக இருந்தது. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா காயம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்தார்.
இந்த தருணத்தில் ஐபிஎல் தொடருக்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பும்ராவின் காயம் இன்னும் குணமடையவில்லை என்று செய்தி வெளியானது. தற்போது அதனை பிசிசிஐ உறுதிப்படுத்தி இருக்கிறது. பும்ரா இன்னும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் பயிற்சி செய்து வருகிறார். பும்ராவின் காயம் குணமடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என்பதால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆரம்ப சிலகட்ட போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிய வந்துள்ளது.
தற்போது முதல் கட்ட தகவல் படி பும்ரா ஏப்ரல் மாதம் மும்பை அணிக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டாலும், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் பும்ரா அந்த தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் பும்ரா முழுமையாக பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.ஹர்திக் பாண்டியாவும், பும்ராவும் இல்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகமாக மாறும்.