மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 63வது லீக் போட்டி இன்று (மே 21) மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகி இருப்பதால், போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மும்பையில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பல்வேறு வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. போட்டி நேரத்துக்கு முன்பும், பின்பும் அதிக அளவு மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் போட்டி நடைபெறும் நேரத்தில் 100% மேகமூட்டமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் போட்டி நடைபெறும் நேரத்தில் இடையிடையே சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் போட்டி தடைபட அதிக வாய்ப்பு உள்ளது.
போட்டி முழுமையாகக் கைவிடப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். எனினும், நான்கு நாட்களுக்கும் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதால், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு அதிக அளவு மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தப் போட்டி முழுமையாக நடைபெறுவது சந்தேகமே.
சமீபத்தில் ஐபிஎல் நிர்வாகம், மழைக்கு இடையே போட்டிகளை நடத்துவதற்காகக் கூடுதலாக இரண்டு மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது. பொதுவாக பிளே ஆஃப் சுற்றுக்கு மட்டும் அளிக்கப்படும் இந்த கூடுதல் அவகாசம், தற்போது லீக் போட்டிகளுக்கும் பொருந்தும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே, போட்டி இரவு ஒரு மணி வரை நடத்தப்பட கால அவகாசம் உள்ளது. அதேபோல, குறைந்தபட்சம் 5 ஓவர் போட்டியாக நடத்தலாம் என்பதால், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டிக்கு முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புள்ளியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். தற்போது மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 புள்ளிகளுடனும் உள்ள நிலையில், மழை காரணமாகப் புள்ளிகள் பகிர்ந்தால் மும்பை இந்தியன்ஸ் 15 புள்ளிகள் பெறும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 14 புள்ளிகளைப் பெறும். இது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவாக அமையும். இந்தப் போட்டியின் முடிவைப் பொறுத்தே நான்காவது பிளே ஆஃப் இடத்திற்கான வாய்ப்புகள் அமையும் என்பதால், மழை குறுக்கீடு இரு அணிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.