மும்பை: 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் மோசமான தோல்வியை சந்தித்தார். அதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரை வென்று ராகுல் டிராவிட் வரலாறு படைத்துள்ளார்.
அதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பணி நிறைவடைந்த நிலையில், அவர் அடுத்தது எந்த அணிக்கு பயிற்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை ஒப்பந்தம் செய்வதற்கு ராஜஸ்தான், மும்பை, டெல்லி உள்ளிட்ட 3 அணிகளும் தீவிரமாக உள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் அணியுடன் ஏற்கனவே பணியாற்றி இருப்பதால், அந்த அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

இருந்தாலும் கங்குலி மூலமாக டெல்லி அணியும், ரோஹித் சர்மா மூலமாக அம்பானி குடும்பமும் ராகுல் டிராவிட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் நடந்த சியாட் விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், இந்திய அணியில் இளம் வீரர்கள் கொஞ்சம் கூட பயமில்லாமல் விளையாட தொடங்கியுள்ளனர்.
கிரிக்கெட் மட்டுமல்லாமல் இந்திய இளைஞர்களின் மன உறுதி அதிகரித்துள்ளதாகவே பார்க்கிறேன். இந்திய இளைஞர்கள் அளவிற்கு வேறு எந்த நாட்டின் இளைஞர்களும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்வதில்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய தலைமுறை வீரர்கள் மீது எந்த குறையோ, சந்தேகமோ கிடையாது. ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இணைந்து இந்திய கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் டிராவிட்டின் பயோபிக் திரைப்படம் எடுத்தால் எந்த நடிகர் நடிக்கலாம் என்ற கேள்விக்கு, போதுமான பணம் கிடைத்தால் சொல்லுங்கள்.. நானே நிச்சயமாக நடிக்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து ராகுல் டிராவிட்டின் அடுத்த பயணம் என்ன கேள்விக்கு, தற்போதைய சூழலில் எனது மனைவி விஜிதா நான் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். வீட்டில் இருந்து என் இரு மகன்களையும் கவனித்து கொள்ள வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கு வெறும் 3 மாதங்கள் மட்டும் ஒதுக்கினாலே போதுமானது. மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே ஐபிஎல் தொடர் நடப்பதால், ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பணியில் ஈடுபட எந்த பிரச்சனையும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ராகுல் டிராவிட்டின் முடிவு என்ன என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.