மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் நேற்று ஒரே நாளில் 3 அணிகள் பிளே ஆஃப்க்குத் தகுதி பெற்று இருக்கின்றன. தற்போது நான்காவது இடம் மட்டுமே மீதம் உள்ளது. அந்த இடத்தில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் உட்பட 3 அணிகள் அந்த ஒரு இடத்துக்காகப் போட்டி போட்டு வருகின்றன. அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 60 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் உள்ளது. இந்த மூன்று அணிகளும் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று இருக்கின்றன. பிளே ஆஃப் சுற்றில் நான்காவது இடம் மட்டுமே மீதம் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று அணிகளில் எந்த அணி 17 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெறுகிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். தற்போதைய சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இந்த அணி விளையாடிய ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 16 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 16 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் இருக்க வேண்டும். மேலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை விடக் குறைவான நெட் ரன் ரேட் பெற்றிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமே.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. அவற்றில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 17 புள்ளிகளைப் பெற முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் வென்றால் அதிகபட்சமாக 18 புள்ளிகளைப் பெற முடியும். எனவே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே அடுத்த லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் அணியே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எளிதாகக் கணிக்கலாம்.