மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த உதவி முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் ஒரு வகையில் தங்களின் பரம எதிரி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவியைப் பெற்றிருக்கிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது லீக் சுற்று முடிவில் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எப்படி நடக்கும் என்று பார்க்கலாம்.

தற்போது 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள். இந்த நான்கு அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஆனால், முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகள் பிளேஆஃப் சுற்றில் முதல் தகுதிப் போட்டியில் (Qualifier 1) தோல்வியடைந்தாலும் மறு வாய்ப்பைப் பெறும். இதனால், முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கு இந்த நான்கு அணிகளுக்கிடையே போட்டி நிலவி வருகிறது.
தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடி முடித்துவிட்டது. அடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடனும் உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும்.
பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தினால் 19 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை உறுதி செய்துவிடும். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தினால் 18 புள்ளிகளைப் பெறும். மேலும், நிகர ரன் ரேட் அதிகமாக இருப்பதால், குஜராத் டைட்டன்ஸை பின் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துவிடும்.
அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பட்சத்தில், அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் மும்பையை முந்தி முதலிடத்தைப் பிடிக்கும்.
எப்படிப் பார்த்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தங்களின் கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்துவிடும். அதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி முதல் இடத்தை உறுதி செய்துவிடும்.
இந்த இரண்டு அணிகளும் முதல் இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் காரணம். குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியதால் தான், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறுவதற்கான எளிதான வாய்ப்பைப் பெற்றுள்ளன.