மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது அணியாக எந்த அணி முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு அணிகளில் ஒரு அணிதான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகிறது. அதிலும் ஒரு 'கிளைமாக்ஸ்' போட்டி நடைபெற உள்ளது.

தற்போது குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.
மீதமிருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நாளை (மே 21, 2025) ஒரு போட்டியில் மோத உள்ளன. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். அதன் பின்னரும் இரண்டு அணிகளுக்கும் ஒரு போட்டி மீதம் உள்ளது.
ஆனால், டெல்லி அணியை வென்றால் அதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தினால் 16 புள்ளிகளைப் பெற்றுவிடும்.
அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் தனக்கு மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வென்றாலும் அதிகபட்சம் 15 புள்ளிகளைத்தான் பெற முடியும். எனவே, அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸை விடப் புள்ளிகளில் முன்னிலை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினால், அதன் பிறகு அந்த அணி தனது கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டும். அந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தோல்வியடைந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை தனது கடைசிப் போட்டியில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.