மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் தற்போது ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளில் எந்த இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும் (18 புள்ளிகள்), பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் (17 புள்ளிகள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் (17 புள்ளிகள்), மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் (16 புள்ளிகள்) உள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பே இல்லை என நேற்று வரை நினைத்திருந்த நிலையில், இன்று நிலைமை மாறி இருக்கிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த நான்கு அணிகளுக்கும் இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சந்திக்க உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஒரு லீக் போட்டியில் மோத உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைச் சந்திக்க உள்ளது.
இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்து, அதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்து, அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தினால், முதல் இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தால், தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலேயே இருக்கும்.
எப்படி பார்த்தாலும், இந்த நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாகிவிட்டது. ஆனால், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடிப்பதன் மூலம், பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டிக்குச் செல்ல இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். அதற்காகவே, இந்த நான்கு அணிகளுக்கு இடையேயான போட்டி சூடுபிடித்துள்ளது.
தற்போது, குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தினால், முதல் இடத்தில் நீடிக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினால், முதல் இரண்டு இடங்களில் இடம் பிடிப்பது உறுதியாகிவிடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, அதன் பிறகு பஞ்சாப் அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தங்களின் போட்டிகளில் தோல்வியடைந்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களில் இடம் பிடிக்க முடியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை, மற்ற மூன்று அணிகளும் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால், முதல் இடத்தைப் பிடிக்கலாம். இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டுமெனில், மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டும்; குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைய வேண்டும்.