மும்பை: ஐபிஎல் தொடரின் போது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா தனக்கு பவுலிங் செய்த போது பதற்றம் 200 சதவிகிதமாக அதிகரித்ததாக ஆர்சிபி இளம் வீரர் அனுஜ் ராவத் தெரிவித்துள்ளார். அதேபோல் பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தன்னை தயார்ப்படுத்தி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்கு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா மீண்டும் களம் திரும்ப தயாராகி வருகிறார். சுமார் 2 மாதங்கள் ஓய்வுக்கு பின் நேரடியாக வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ரா களமிறங்கவுள்ளதால், அவர் பவுலிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் பும்ராவின் பவுலிங்கை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் பும்ரா குறித்து ஆர்சிபி இளம் வீரர் அனுஜ் ராவத் பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அனுஜ் ராவத் பேசுகையில், புனேவில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஆர்சிபி அணிக்காக கேப்டன் டூ பிளசிஸ் மற்றும் நானும் களமிறங்கி இருந்தோம்.
உனாத்கட் வீசிய ஓவரில் 2 அபார சிக்சர்களை டூ பிளசிஸ் விளாசி இருந்தார். அதன்பின் அடுத்த ஓவரிலேயே பும்ரா அட்டாக்கில் வந்தார். அந்த நேரத்தில் எனது மனதில் பதற்றம் 200 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது என்று சொல்ல முடியும். ஏனென்றால் பும்ராவை அதற்கு முன் எங்கும் எதிர்கொண்டதில்லை. அது தான் முதல்முறை என்பதால், பதற்றம் உச்சத்திற்கு சென்றுவிட்டது. ஆனால் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் பணியாற்றினேன்.
பேட்டிங் பயிற்சியின் போது சஞ்சய் பங்கர் என்னிடம் வந்து, உனக்கு என்ன மாதிரியான பந்துகளை பும்ரா வீசுவார் என்று நினைக்கிறாய் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான், எனது கால்களை குறித்து லெந்த் பால்களை வீசுவார் என்று கூறினேன். அவர் உடனடியாக சரியாக சொல்கிறாய்.. அதற்கேற்றபடி தயாராகி கொள் என்று அறிவுறுத்தினார். அவரும் சில அட்வைஸ்களை வழங்கினார். போட்டியின் போது நாங்கள் எதிர்பார்த்தபடி பும்ரா நேராக எனது கால்களுக்கே பந்துகளை வீசினார்.
நான் நினைத்தபடி அவர் பவுலிங் செய்ததால், என்னால் எளிதாக ஃபிளிக் ஷாட் அடிக்க முடிந்தது. சஞ்சய் பங்கர் சார் என்னை தயார்ப்படுத்திய போதும், பும்ரா பவுலிங் செய்ய வரும் போது சிறிய பதற்றம் தொற்றிக் கொண்டது. அதுதான் பும்ரா. அந்த போட்டியில் நான் 47 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்களை விளாசினேன். மும்பை அணிக்கு எதிராக அரைசதம் விளாசியது எனது மன உறுதியை அதிகரித்தது என்று சொல்ல முடியும். ஏனென்றால் மும்பை அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக இருந்தது.
அதேபோல் அந்த அரைசதம் கூடுதல் ஸ்பெஷலானது. ஏனென்றால் நான் அரைசதம் அடித்த போது, விராட் கோலி தான் எதிர் முனையில் நின்றிருந்தார். அதற்கு முன்பாக சில போட்டிகளில் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தாலும், அன்றைய பார்ட்னர்ஷிப் ஒரு நல்ல நிலைக்கு என்னை கொண்டு சென்றது. அந்த நேரத்தில் நாம் ஐபிஎல் தொடர் விளையாடுவதற்கான தகுதியுடன் இருக்கிறோம் என்று நம்பிக்கை வந்தது என்று தெரிவித்துள்ளார்.