மும்பை: மும்பை அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மா பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா வந்த பின்னரும் மும்பை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. அதேபோல் ரோஹித் சர்மாவை பதவி நீக்கம் செய்ததால், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் ஹர்திக் பாண்டியாவின் பேச்சை கேட்கவே இல்லை.
அதேபோல் அடுத்த சீசனுக்கு முன்பாக ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் மும்பை அணியில் உள்ள 7 இந்திய வீரர்களையும் தக்க வைப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 4 இந்திய வீரர்களை தான் மும்பை அணியால் தக்க வைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்க வைக்கவே பெரும் தொகையை செலவிட வேண்டிய நிலை உருவாகும். இவர்கள் மூவருக்கும் மேல் ரோஹித் சர்மாவை தக்க வைப்பதே சரியான முடிவாக இருக்கும். அப்படி செய்வது மும்பை அணிக்கு ஏலத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். இதனால் ரோஹித் சர்மாவை ஆர்டிஎம் மூலமாகவே மீண்டும் வாங்க மும்பை முயற்சிக்கும்.
ஆனால் டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பதால், ரோஹித் சர்மாவின் பிராண்ட் வேல்யூ உச்சத்தில் உள்ளது. அவரை வாங்கினால் தங்கள் அணியின் ரசிகர்களின் பட்டாளம் அதிகரிக்கும் என்று பல்வேறு அணிகளின் உரிமையாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா ரோஹித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக உள்ளார்.
அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ்-க்கு வயதாகிவிட்ட காரணத்தால், அந்த அணிக்கும் கேப்டனுக்கான தேவை ஏற்பட்டுள்ளது. பெங்களூர் மைதானத்தில் ரோஹித் சர்மாவின் சாதனைகளை தனியாகவே எழுதலாம். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி - ரோஹித் சர்மா கூட்டணி ஒரே அணியில் விளையாடினால் ரொனால்டோ - மெஸ்ஸி ஒரே அணியில் ஆடுவதை போல் மாறிவிடும்.
இதனை ஆர்சிபி அணி செயல்படுத்த தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் ஓய்வை அறிவித்திருப்பதால், பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா புதிய கேப்டனாக இந்திய ஜாம்பவான் ரோஹித் சர்மா வந்தால் நிச்சயம் வாங்க தீவிரமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இதனால் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவுக்கான கிராக்கி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.17 முதல் ரூ.20 கோடி வரை ரோஹித் சர்மாவை வாங்குவதற்கு நிச்சயம் தொகை செலவு செய்ய நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.