அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி, அதில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த அணியின் தோல்விக்கு பயிற்சியாளர்கள் குழுதான் காரணம் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டில் துவக்கத்தில் மோசமாக விளையாடிய போதும், அதன் பிறகு தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஆச்சரியம் அளித்தது. அதன் பிறகு புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக செயல்பட்டு 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் 203 ரன்கள் எடுத்த போதும், பந்துவீச்சில் சொதப்பியதை அடுத்து தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்த்தனே, பேட்டிங் பயிற்சியாளர் கீரான் பொல்லார்ட், பவுலிங் பயிற்சியாளர்களான லசித் மலிங்கா மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசும்போது இடையிடையே புகுந்து தங்களின் ஆலோசனைகளை அளித்துக்கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சில சமயம் அது வீரர்களின் மனதை குழப்பம் அளவுக்கு செல்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பும்ராவுக்கு மகிளா ஜெயவர்த்தனே ஆலோசனை அளித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பும்ரா, "உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள். எனக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும்" என கோபமாக பேசினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தன.
அதற்கு அடுத்து நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் சொதப்பியபோது, பயிற்சியாளர்கள் குழு இடைவேளை நேரம் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் பவுண்டரி எல்லைக்கு அருகே நின்று கொண்டு ஆலோசனைகளை அள்ளி வீசிக்கொண்டே இருந்தனர்.
ஒரு சமயம் ரீஸ் டாப்லி உயரமானவர் என்பதால் 13 வது ஓவரை அவரை வீசச் செய்யுமாறு கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆலோசனை அளித்தார் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே. ஆனால் அது வேலை செய்யவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். அது பின்னடைவாக மாறியது. மேலும், மும்பை இந்தியன்ஸ் பவுலர்களைப் பார்த்து ஜெயவர்த்தனே மற்றும் பராஸ் மாம்ப்ரே கத்திக்கொண்டே இருந்தனர்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்: "மகிளா ஜெயவர்த்தனே சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறார். பராஸ் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் உயரமான மற்றும் உயரம் குறைந்த பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்துமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்."
"மகிளா ஜெயவர்த்தனே ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பை வெல்லாத ஒரு வீரர். அவர் பல முன்னணி அணிகளில் இடம் பிடித்து விளையாடி இருக்கிறார். ஆனால், அதற்காக உங்கள் கேப்டனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. உங்கள் அணியின் வீரர்களை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் உலகக் கோப்பை வென்றவர்கள். அவர்களை தங்கள் இயல்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்" என ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டி விளாசி இருக்கிறார்.