அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மோத இருந்தன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டி துவங்கும் முன் மழை பெய்ததால்
இதை அடுத்து போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மழை அதிகம் பெய்து போட்டி நடக்காமல் போனால் ஐபிஎல் விதி என்ன சொல்கிறது? எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? என்பது பற்றிப் பார்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் (Reserve Day) அறிவிக்கப்படவில்லை. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதற்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்பட்டபோது, ரிசர்வ் நாள் என்பது ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை.
அதன்படி பார்த்தால், இந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மழை பெய்து போட்டியை நடக்காமல் போனால், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். ஏனெனில், ரிசர்வ் நாள் இல்லாத சூழ்நிலையில் போட்டி நடக்காமல் போனால், புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அதன்படியே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
தற்போது ஐபிஎல் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 19 புள்ளிகள் மற்றும் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19 புள்ளிகளுடனும், பஞ்சாப் கிங்ஸை விட குறைந்த நெட் ரன் ரேட்டுடனும் இருந்தன.
மூன்றாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இருந்தன. அதன் அடிப்படையில், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி மழையால் தடைபட்டால், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது மழை பெய்யும் நிலையில் போட்டி நேரத்தை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விதிப்படி இரவு 10:56 -க்கு போட்டி முடிவடைய வேண்டும். ஒருவேளை மழையால் பாதிப்பு ஏற்பட்டால், நள்ளிரவு 12:56 வரை போட்டியை நடத்துவதற்கு அனுமதி உள்ளது. அதற்குள் இரு அணிகளுக்கும் தலா 5 ஓவர்கள் அளித்து போட்டியை நடத்த முடியாமல் போனால் போட்டி கைவிடப்படும். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.