மும்பை: ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகள் என்றால் அது சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான். இரு அணிகளும் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழலில் இரு அணிகளின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்வது வழக்கம்.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி என்று வந்தால் அவர்களை நடுவர்களுடன் ஒப்பிட்டு பலரும் கிண்டல் செய்வார்கள். நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான அஸ்வின் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக சாடி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக அதிர்ஷ்டம் இருப்பதாக கிண்டல் அடித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு அதிக அளவு அதிர்ஷ்டம் இருக்கும். 2018 ஆம் ஆண்டு நான் மும்பைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியை கேப்டனாக வழி நடத்தினேன். அப்போது 13 வது ஓவர் என நினைக்கின்றேன்.
மும்பை அணி 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மும்பை அப்போது போட்டியில் உள்ளே இல்லை. திடீரென்று மைதானத்தில் இருந்த மின்விளக்குகள் அணைந்தன. ஒரு 20 நிமிடம் பிரேக் ஏற்பட்டது. இதன் பிறகு போட்டி தொடங்கியதில் இருந்து பொலார்ட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை 180 இல் இருந்து 200 வரை கொண்டு சென்றார்.
மும்பைக்கு மட்டும் இது போன்ற அதிர்ஷ்டம் எங்கிருந்து வரும் என்று தெரியாது அதிர்ஷ்டத்தை சம்பாதிப்பார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் மும்பைக்கு மட்டும் எப்படி இவ்ளோ அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்பதை நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார். கவனச் சிதறலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் விஷயங்களை மும்பை இந்தியன்ஸ் செய்யும் என்று மறைமுகமாக அஸ்வின் சாடியிருக்கிறார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.