மும்பை: டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அவருடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதன் மூலமாக டெல்லி அணியுடனான ரிக்கி பாண்டிங்கின் உறவு முடிவுக்கு வந்தது. அந்த அணியின் உரிமையாளர் பார்த் ஜிந்தால் அதிகாரப்பூர்வமாகவும் இதனை அறிவித்தார்.
ரிக்கி பாண்டிங்கின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. 7 ஆண்டுகளாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தும், அந்த அணி ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் டெல்லி அணியின் மூலமாக ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு ஐபிஎல் ஒப்பந்தங்களை ரிக்கி பாண்டிங் பெற்று கொடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

டெல்லி அணியில் மட்டும் மெக்கர்க், டேவிட் வார்னர், ஜய் ரிச்சர்ட்சன் மற்றும் மிட்சல் மார்ஷ் என்று ஆஸ்திரேலியா வீரர்களை அதிக தொகை கொடுத்து தனது பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த முடிவுகள் மீதும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியாளர் பதவிக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இதனிடையே டெல்லி அணியின் இயக்குநராக பணியாற்றி வரும் சவுரவ் கங்குலி, இந்திய பயிற்சியாளரை நியமிக்குமாறு டெல்லி அணி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். ஏனென்றால் ஐபிஎல் தொடரை வெல்வதற்கு இந்திய ஆடுகளங்கள் குறித்து போதுமான அறிவும், இந்திய வீரர்கள் குறித்த புரிதலும் மிக அவசியம். அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் கையாள தெரிந்தாலே போதுமானது.
இதனால் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்ய டெல்லி அணி நிர்வாகம் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புவதால், என்சிஏ தலைவராக ராகுல் டிராவிட் தற்போது வருவதற்கு வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டை நன்றாக புரிந்துகொண்டுள்ள ராகுல் டிராவிட், இந்திய அணியின் அணுகுமுறையை மொத்தமாக மாற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தார். அதேபோல் ஐபிஎல் தொடருக்கான பணி வெறும் 3 மாதங்கள் மட்டுமே என்பதால், ராகுல் டிராவிட் டெல்லி அணியின் ஆஃபரை ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சவுரவ் கங்குலியும் டெல்லி அணியில் இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.