மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் சூழலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் எந்தெந்த வீரர்களை ரிடெய்ன் செய்யலாம் என்ற ஆலோசனை தொடங்கியுள்ளது. அதன்படி, நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லரை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் மூலமாக மீண்டும் வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 30ல் சவுதி அரேபியாவில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏலம் துபாயில் உள்ள கோகோ-கோலா அரங்கில் ரசிகர்களின் முன்னிலையில் நடந்தது. இதனால் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இம்முறை ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடத்தப்படவுள்ளது. இதற்காக 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூடுதல் சிறப்பாக செயல்பட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளராக ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் இணைந்துள்ளனர். ராகுல் டிராவிட் - சங்கக்காரா கூட்டணி இணைந்து ராஜஸ்தான் அணிக்கு செயல்படவுள்ளது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.
இந்த நிலையில் மெகா ஏலத்திற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 6 வீரர்களை ரிடெய்ன் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.79 கோடி செலவு செய்ய வேண்டிய சூழல் வரும். இதனால் ரிடெய்ன் பாலிசியை ஒவ்வொரு அணியும் எப்படி பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், சாஹல், அஸ்வின், ரியான் பராக், துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான், போல்ட், பட்லர் என்று ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருக்கின்றனர். இவர்களில் கேப்டன் சஞ்சு சாம்சன் ரூ.18 கோடிக்கு நிச்சயம் தக்க வைக்கப்படுவார். அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ.14 கோடிக்கு தக்க வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
3வது வீரராக ரியான் பராக் ரிடெய்ன் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அன்-கேப்ட் வீரராக சந்தீப் சர்மாவை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 2 ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் மெகா ஏலத்தை ராஜஸ்தான அணி சந்திக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லரை மெகா ஏலத்தில் விடும் முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் 2018ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணியால் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு வருபவர் ஜாஸ் பட்லர். சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் அவர், மெகா ஏலத்திற்கு வந்தால் தாராளமான ரூ.15 கோடி வரை செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் சிலர் விவாதித்து வருகின்றனர்.