மும்பை : ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான வீரர்களை தக்க வைக்கும் முறைக்கான புதிய விதிகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, இரண்டு வீரர்களுக்கு 18 கோடி ரூபாயும், இரண்டு வீரர்களுக்கு 14 கோடி ரூபாயும், ஒரு வீரருக்கு 11 கோடி ரூபாயும், இந்திய அணிக்கு சர்வதேச போட்டிகள் விளையாடாத வீரர்களுக்கு 4 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று விதி இருக்கிறது.

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை 18 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. ஆனால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரோகித் சர்மா மெகா ஏலத்தில் பங்கு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவை பல அணிகள் தங்களது அணிக்கு கொண்டு வர காய் நகர்த்தி வருகிறது. ஏனென்றால் லக்னோ, ஆர் சி பி, பஞ்சாப் போன்ற அணிகளுக்கு சரியான கேப்டன்கள் இல்லை. இதனால் ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றால், மிகப்பெரிய விலைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ஆர் சி பி அணி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், ஒரு வீரருக்கு 19 அல்லது 20 வயதாக இருக்கலாம். ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடும் இளம் வீரரை கூட அவர் சீனியர் வீரர்கள் போல் மாற்றி விடுவார்.ஒரு வீரர் சிறந்து செயல்படுவதை ரோகித் சர்மா முன் நின்று உறுதி செய்வார். ரோகித் சர்மாவுக்கு களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற யுக்திகள் தெரியும்.
எனவே ஆர்சிபி அணிக்கு வாய்ப்பு கிடைத்தால் ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டன் பதவியில் நியமிக்க வேண்டும் என்று கையிப் கூறியுள்ளார். விராட் கோலி தொடக்கத்தில் இருந்தே ஆர்சிபி அணிக்காக தான் விளையாடி வருகிறார்.ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடி இருக்கிறார்.
இந்த சூழலில் ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணியில் இருந்து வெளியேறி ஆர் சி பி அணிக்கு வந்தால் கோலியும், ரோகித்தும் மீண்டும் ஒன்றாக இணைந்து விளையாட வாய்ப்பு ஏற்படும். அப்படி நடந்தால் அது நிச்சயம் ஆர் சி பி அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.