சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல இளம் வீரர்களின் வாழ்க்கையை தலைக்கீழ் மாற்றி இருக்கிறது. அப்படி ஐபில் 2008 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் தான் ஜடேஜா.
கிரிக்கெட் ஜாம்பவான் தோனி, ராக் ஸ்டார் என்று புகழப்பட்ட ஜடேஜா அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக விளங்கினார். டி20, ஒருநாள் மட்டும் அல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா பட்டையை கிளப்பினார்.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜடேஜா கடந்த 13 ஆண்டுகளாக விளங்கி வருகிறார். ஜடேஜாவின் வருகைக்கு பிறகு சிஎஸ்கே அணி சுழற் பந்துவீச்சு பலமான அணியாக விளங்குகிறது. சிஎஸ்கே அணிக்கு பல போட்டிகளில் பந்துவீச்சிலும் பேட்டிங்களும் தனியாளாக நின்று போட்டியை ஜடேஜா மாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் ஒரு மகத்தான ரெக்கார்டை படைத்திருக்கிறார். ஆர்சிபி நிர்ணயித்த 197 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதில் ஜடேஜா 19 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் எடுத்தார்.
ஜடேஜா மெல்ல மெல்ல ஃபார்ம்க்கு திரும்பும் சமிக்கிகளை வெளிப்படுத்தினாலும், ஜடேஜாவின் இந்த ஆட்டம் சிஎஸ்கேவில் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் 17.3 வது ஓவரில் சுயாஸ் ஷர்மா வீசிய பந்தில் ஜடேஜா ஒரு சிக்சர் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3000 ரன்கள், 100 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார்.
இதற்கு முன்பு ஐபிஎல் வரலாற்றில் எவ்வளவோ ஆல்ரவுண்டர்கள் விளையாடியும், இந்த மகத்தான சாதனையை யாராலும் தொடமுடியவில்லை. இதன் மூலம் ஜடேஜா எந்த அளவுக்கு ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கி வருகிறார் என்பது தெரிய வருகிறது. ஜடேஜா 2010 ஆம் ஆண்டு அனுமதி இன்றி வேறு அணிக்கு மாற முயற்சி செய்ததாக கூறி ஒரு சீசன் முழுவதும் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜா இவ்வளவு மகத்தான சாதனைகளை படைத்தாலும் சமீப காலமாக அவருடைய பேட்டிங் பெரிய அளவு கை கொடுக்கவில்லை. இதனால் ஜடேஜா இனி வரும் போட்டிகள் ஆவது தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஜடேஜா பேட்டிங் வரிசையில் ஐந்தாவது அல்லது நான்காவது இடத்தில் களம் இறங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.