மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ஆறாவது தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் எட்டு போட்டியில் விளையாடி சிஎஸ்கே அணி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெறும் 176 ரன்கள் மட்டுமே எடுக்க அதனை 15 புள்ளி நான்கு ஓவரில் எல்லாம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி என்னென்ன தவறு செய்தது என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பெரிய அளவு சாதிக்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் ரன்கள் அடித்ததை தவிர அவர் அடுத்த போட்டிகளில் எல்லாம் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
இதனால் ரச்சின் ரவீந்திராவை அணியை விட்டு நீக்க வேண்டும். இதேபோன்று தொடக்க வீரர்கள் கிரிக்கெட் டெக்ஸ்ட் புக் ஷாட்களை (கவர் டிரைவ், ஆன் டிரைவ்) மட்டும் தான் ஆட வேண்டும் என்ற அறிவுறுத்தலை தோனி வழங்கி இருக்கிறார். இதனால் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் கவர் டிரைவ் ஷாட்களை ஆடி சிஎஸ்கே வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறுகிறார்கள்.
இது நவீன கால டி20 என்பதால் எடுத்த உடனே பேட்டை சுற்றி ரன்கள் சேர்த்தால் தான் பவர் பிளேவில் அதிக ரன்கள் பெற முடியும். இதனால் சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் ஸ்டைலை முற்றிலும் மாற்ற வேண்டும். இதைப் போன்று சிஎஸ்கே அணியில் இன்றைய ஆட்டத்தில் வன்ஷ் பேடி என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
ஆயுஷ் மாத்ரே 17 வயது வீரராக இன்று பட்டையை கிளப்பினார். அதேபோல் வன்ஷ் பேடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், தன்னுடைய திறமையை நிச்சயம் நிரூபித்து இருப்பார். இதனால் ரச்சின் ரவீந்திராவுக்கு பதில் வன்ஷ் பேடியை சேர்த்து இருக்க வேண்டும். அதேபோன்று நடுவரிசையில் டிவால்ட் பிரேவீசை சிஎஸ்கே அணி பயன்படுத்தியிருக்க வேண்டும்.
பிரவீஸுக்கு மும்பை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதல் போட்டியிலே பிரவீஸை பயன்படுத்தி இருந்தால் சிஎஸ்கே அணி நடுவரிசையில் அதிக ரன்களை சேர்த்து இருக்கும். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா, சிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், நடு ஓவர்களில் அவர்கள் ஆட்டத்தை டெஸ்ட் போட்டி போல் மாற்றி விட்டார்கள்.
நடு ஓவர்களிலும் இந்த ஜோடி அதிரடி காட்டி இருந்தால், நிச்சயம் சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் 200 ரன்களை தாண்டி இருக்கும். இதேபோன்று சிஎஸ்கே அணி இளம் வீரர் அன்சூல் காம்போஜை பிளையிங் லெவனில் சேர்க்கவில்லை. அன்சூல் காம்போஜ் நன்றாக பந்து வீசக்கூடியவர். பேட்டிங்கிலும் நன்றாக ஆடக்கூடியவர்.
இந்த நிலையில் விஜய் சங்கர் இன்று பேட்டிங்கும் செய்யவில்லை பந்துவீச்சும் செய்யவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு அன்சூல் காம்போஜை சேர்த்து இருக்க வேண்டும். இப்படி பல தவறுகளை சிஎஸ்கே அணி செய்ததால் தான் மும்பைக்கு எதிராக தோல்வியை தழுவியது.