மும்பை : ஐபிஎல் தொடர் மூலம் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை உச்சத்திற்கு சென்றிருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதற்காக வார நாட்களில் டெல்லி வரும் ரிஷப் பண்ட் கையில் பணம் இல்லாமல் சீக்கியர்களின் கோயில்களில் தஞ்சம் புகுந்து அங்கு அளிக்கும் கோயில் பிரசாதங்களை உண்டு வாழ்ந்திருக்கிறார்.
அந்த ரிஷப் பண்ட் தான் தற்போது தன்னுடைய கடின உழைப்பு மூலமாக இன்று உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். அண்டர் 19 உலக கோப்பை மூலம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், ரஞ்சி கோப்பை ஐபிஎல் என தம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடர் மூலம் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து இருக்கிறார்.ஐபிஎல் தொடரில் பண்ட், தன்னுடைய முதல் சீசனில் இருந்து எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். அண்டர் 19 உலக கோப்பையில் இடம் பிடித்த பண்ட், 2016 ஐபிஎல் ஏலத்திலேயே பெரிய வாய்ப்பு கிடைத்தது.
டெல்லி அணி ரிஷப் பண்டை ஒரு கோடியே 90 லட்சம் சம்பளம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ரிஷப் பண்ட், ஒரு கோடியில் 90 லட்சம் சம்பளம் வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ரிஷப் பண்டின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த இரண்டு சீசன்களாக ஒரு கோடியே 90 லட்சம் வாங்கிய பண்ட், 2018 ஆம் ஆண்டு முதல் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.
2019 மற்றும் 2020 என இரண்டு சீசன்களிலும் பண்டின் சம்பளம் எட்டு கோடி ரூபாயாகவே இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ரிஷப் பண்டின் சம்பளம் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்தது. 2021 ஐபிஎல் சீசனில் டெல்லி அணி பண்டை 15 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதேபோன்று பண்ட் 2022 ஐபிஎல் சீசனில் 16 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.
2023 மற்றும் 2024 என தொடர்ந்து இரண்டு சீசன்களும் டெல்லி அணிக்காக விளையாட ரிஷப் பண்ட் தலா 16 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.
இந்த நிலையில் ரிஷப் பண்டின் சம்பளம் இதைவிட ஏறாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அவர் டெல்லி அணியில் இருந்து விலகினார். இதை அடுத்து 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் பண்ட், 27 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றிருக்கிறார். டெல்லி அணியில் தொடர்ந்து விளையாடுகின்ற பண்ட் தற்போது லக்னோ அணிக்காக விளையாட போகிறார். இதன் மூலம் பண்ட் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 117 கோடியே 80 லட்சம் ரூபாயை சம்பளமாகவே பெற்று இருக்கிறார்.