லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் ரிஷப் பண்ட் தனது கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
ஏனெனில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இதுவரை ரிஷப் பண்ட் தலைமையில் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இது ஒன்றும் அதிகமில்லை என்றாலும், ரிஷப் பண்ட் இந்த தோல்விகளால் பெரும் அவமானத்தை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே பன்மொழிக் உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகிறார். மிகவும் கோபமாக பேசுகிறார். இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில்தான் இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வி அடைந்தால், அது போன்ற ஒரு சூழ்நிலையை ரிஷப் பண்ட் மீண்டும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, ரிஷப் பண்ட் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என கூறத் துவங்கி உள்ளனர். இது நடப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இப்படி ஒரு பேச்சு கிளம்பி உள்ளது.
வேறு சிலரோ, ரிஷப் பண்ட் கேப்டனாக சரியாக செயல்பட மாட்டார். அவரது கேப்டன் பதவியை நீக்கினால் ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அவரால் சிறப்பாக செயல்பட முடியும். எனவே, அவரது இயல்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கக் கூடாது. எனவே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் வேறு ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதுவரை லக்னோ அணி ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ள போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என கூறப்படுகிறது. போட்டி செல்ல செல்ல சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் பிட்ச் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், அதிக ஈரப்பதமாகவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை பெற்று இருக்கிறது. புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடையும்.