மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தடுமாறி வருகிறது. இரு அணிகளும் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், தற்போது புள்ளி பட்டியலில் மும்பை ஒன்பதாவது இடத்திலும், சிஎஸ்கே அணி பத்தாவது இடத்தில உள்ளது.
எனினும் மும்பை அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், இந்த நான்கிலும் போராடி தான் தோற்றது. சிஎஸ்கே அணி போல் இல்லாமல் மும்பை அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே சிறப்பானதாக இருக்கிறது.

இதனால் மும்பை அணி தொடர் வெற்றிகளை பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் மும்பை அணி புள்ளி பட்டியலில் மேலே பெறுவதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் கதை மும்பைக்கு நேர் எதிரானது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள டெல்லி அணியும்,9வது இடத்தில் உள்ள மும்பை அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டிக்காக மும்பை அணி வீரர்கள் டெல்லி பிரோசா கொட்லா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நேற்று இரவு டெல்லியில் திடீரென்று சூரை காற்று வீசியது. இதனால் மைதானத்தில் மேலே இருந்த பொருட்கள் எல்லாம் காற்றில் பறந்தது. இதனை பார்க்காமல் மும்பை அணி வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்கு உள்ளே வர தயாராக இருந்த ரோகித் சர்மா இந்த காட்சிகளை பார்த்து உடனடியாக மும்பை அணி வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கத்தி கூச்சல் போட்டார்.
இதனை அடுத்து மும்பை அணி வீரர்கள் ஓடி வந்தனர். அப்போது ரோகித் சர்மா ஒவ்வொருவரையும் கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பதிவிட்டுள்ள ரசிகர்கள், ரோகித் சர்மா அண்மைக்காலமாக பேட்டிங்கில் வேண்டுமானாலும் மும்பை அணியை காப்பாற்றாமல் இருக்கலாம். ஆனால் இன்று மும்பை அணிக்கு உண்மையிலேயே இயற்கையால் ஆபத்து ஏற்பட்டபோது ரோகித் சர்மா தான் அனைவரையும் எச்சரித்து காப்பாற்றி இருப்பதாக பாராட்டி உள்ளனர்.