மும்பை: ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடத்தப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மீண்டும் நடக்கவுள்ளது.
ஏற்கனவே பல்வேறு அணிகளும் தங்களின் கருத்துகளை கூறியுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

கடந்த சீசனில் குஜராத் அணியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை திடீரென மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. இதற்கு அவரின் மனைவி ரித்திகா நேரடியாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். ஐபிஎல் விதிகளின்படி 3 இந்திய வீரர்களை மட்டுமே ஒரு அணியால் தக்க வைக்க முடியும். அதன்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரை தான் ரீடெய்ன் செய்ய முடியும். இதனால் ரோஹித் சர்மாவை தக்க வைக்க முடியாது என்றே பார்க்கப்படுகிறது.
இதனிடையே மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா பங்கேற்றால், பல்வேறு அணிகளும் அவரை வாங்க முயற்சிப்பார்கள். சீனியர் வீரர் என்றாலும் பிராண்ட் மதிப்புமிக்க என்பதும், டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பெயரும் ரோஹித் சர்மாவுக்கு சாதகமாக அமையும்.
அதேபோல் ஆர்சிபி, லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட 3 அணிகளும் சரியான கேப்டன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவுடன் ரோஹித் சர்மா நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். இதனால் லக்னோ அணியின் கேப்டன் பதவியை ரோஹித் சர்மா ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.