மும்பை: முகமது சிராஜ், ரோகித் சர்மா மீது அதிருப்தியுடன் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் ரோகித் சர்மா முகமது சிராஜிக்கு டி20 உலகக் கோப்பை வெற்றிக்கான மோதிரத்தை அணிவித்திருக்கிறார். இது இருவருக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்ததாகப் பார்க்கப்படுகிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, அதில் முகமது சிராஜின் பெயர் இடம் பெறவில்லை. அதை அறிந்து முகமது சிராஜ் அதிர்ச்சியடைந்தார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்மீது நம்பிக்கை வைக்காததால் தான் இவ்வாறு நடந்தது என அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் ரோகித் சர்மாவும், முகமது சிராஜ் சரியாகப் பந்துவீச மாட்டார் என்பது போல ஊடகங்களிடம் பேசியதும் சர்ச்சையாக மாறியிருந்தது. அதனால் ரோகித் சர்மா மற்றும் முகமது சிராஜ் இடையே இடைவெளி அதிகரித்து விட்டதாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா, முகமது சிராஜுக்கு 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கான மோதிரத்தைப் பரிசளித்தார்.
2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்றது. அந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் சென்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. அந்தத் தொடரில் முகமது சிராஜ் 3 போட்டிகளில் விளையாடினார். உலகக் கோப்பை வென்ற அணியில் அவரும் இடம்பெற்றிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி வீரர்களுக்கு உலகக் கோப்பை வெற்றிக்காக பிசிசிஐ ஒரு சிறப்பு மோதிரத்தைப் பரிசளித்திருந்தது. அந்த நிகழ்வின் போது முகமது சிராஜ் அதில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், முகமது சிராஜிக்கு அளிக்க வேண்டிய மோதிரத்தை ரோகித் சர்மா அவருக்கு அளித்தார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து, ரோகித் சர்மா மற்றும் முகமது சிராஜ் இடையேயான இடைவெளி முடிவுக்கு வந்து விட்டதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்தத் தொடரில் முகமது சிராஜ் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.