மும்பை: தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இந்திய அணியில் வீரராக நான்கு ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா மிக உருக்கமாக பதில் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்து எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எப்படியாவது வான்கடே மைதானத்தில் நுழைந்து மும்பை ரஞ்சி அணி வீரர்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைப்பேன். 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் இருந்த போது ஆசாத் மைதானத்தில் நாங்கள் பயிற்சி செய்வோம்.
அப்போது ரஞ்சி வீரர்கள் அங்கு பயிற்சி செய்யும் போது அவர்கள் என்ன செய்வார்கள் என்று பார்ப்பேன். நான் இங்கு விளையாடிய முதல் போட்டி இன்னும் என் நினைவில் இருக்கின்றது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை. என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மைதானத்தில் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றது. வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம்.
இங்கு நாம் அதிக போட்டிகளில் விளையாடிருகின்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதன் முதலில் கிரிக்கெட் விளையாடும்போது நாம் எவ்வளவு தூரம் எவ்வளவு நாள் விளையாட போகிறோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் நான் இந்த மைதானத்தில் ஒரு சாதாரண வீரராக வந்து தற்போது எனது பெயரிலே ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்பதில் நினைக்கும் போது உணர்ச்சி வசமாக இருக்கின்றது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.